இந்த மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு தடை! மீன்வளத்துறை பிறப்பித்த திடீர் உத்தரவு! 

0
140

இந்த மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு தடை! மீன்வளத்துறை பிறப்பித்த திடீர் உத்தரவு! 

விசைப்படகு மீனவர்கள் மற்றும் பிற நாட்டுப் படகு மீனவர்கள் இன்று ஒரு நாள் மட்டும் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது காரைக்காலுக்கு தென்மேற்கு 650 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதனால் தமிழகத்தில்  தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தில் வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு நிலையால் நேற்று முதல் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.  வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதும் பாம்பன் துறைமுகத்தில் நேற்று 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும் ராமேஸ்வரம், தங்கச்சி மடம், பாம்பன், தொண்டி, ஏர்வாடி, உள்ளிட்ட இடங்களில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

இதையடுத்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் காற்று அதிக சீற்றத்துடன் வீச கூடும் என்றும் கடல் அதிக கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டு படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.

இந்த அறிவிப்பை ஒட்டி இன்று கடலுக்கு செல்வதற்கான டோக்கன் யாருக்கும் வழங்கப்படவில்லை. கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டம் அதைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரம் இடப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நாட்டு படகு மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை.

திடீர் தடையால் மீனவர்கள் மற்றும் அது சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் என 50,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் துறைமுகங்கள் ஆளில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. இன்று காலை முதலே ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம்  கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசியது.

கடல் சீற்றத்தால் பாம்பன் பகுதியில் உள்ள குடிசை வீடுகளில் தண்ணீர் புகுந்தது. சூறாவளி காற்றால் தனுஷ்கோடி தீவு பகுதியில் வழக்கத்தை விட அதிக கொந்தளிப்புடன் கடல் காணப்பட்டது. எனவே அங்கு சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.