இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி! விராட் கோலி படைத்துள்ள மேலும் ஒரு சாதனை!!

0
83

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி! விராட் கோலி படைத்துள்ள மேலும் ஒரு சாதனை!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது இலங்கை கிரிக்கெட் அணி. இதில் 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைபற்றியது இந்திய அணி. இதையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. அதன்படி இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று தொடங்கியது.

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கிய பிறகு ரோகித் சர்மா மூன்று வடிவிலான போட்டிக்கும் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்தியா விளையாடி வரும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர்.

ரோகித் 29 ரன்களில் லகிரு குமாரா பந்துவீச்சில் ஆவுட்டானார். அடுத்ததாக 33 ரன்கள் எடுத்திருந்த மயங்க் அகர்வால் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேறினார். இந்த போட்டியில் தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 45 (75 பந்துகள் 5 பவுண்டரிகள்) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

விராட் கோலி, 38.2வது ஓவரில் பெர்னாண்டோ வீசிய பந்தில் ஒரு ரன் எடுத்தபோது, டெஸ்ட் போட்டியில் 8 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.  இந்த சாதனையை படைத்த ஆறாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

author avatar
Parthipan K