தொடர்ந்து 21-வது நாளாக தீப்பற்றி எரியும் குப்பை கிடங்கு – பொதுமக்கள் அவதி

0
125
#image_title

தொடர்ந்து 21-வது நாளாக தீப்பற்றி எரியும் குப்பை கிடங்கு – பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் அமைந்துள்ள குப்பை கிடங்கு பற்றி எாிந்து அப்பகுதி புகை மூட்டமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகியுள்ளனர்.

திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தின் அருகே நகராட்சி குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது. திருவண்ணாமலை நகரில் உள்ள 39 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை இந்த குப்பை கிடங்கில் சேமித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் கடந்த 10ஆம் தேதி அன்று தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனம் மற்றும் தண்ணீர் லாரிகள் கொண்டு தொடர்ந்து 21 நாட்களாக தீயை அழிக்கும் பணியில் இவர்கள் மட்டுமே மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.இருப்பினும் தொடர்ந்து 21 நாளாக இந்த குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயினை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.

 

குறிப்பாக கடந்த 21 நாட்களாக இந்த தீ விபத்தினால் எழும் புகைமூட்டத்தால் இந்த குப்பை கிடங்கை சுற்றியுள்ள ஜன்னத் நகர், தமிழ்மின் நகர், தென்றல் நகர், மின்நகர், முத்துமாரியம்மன் நகர், ஐயப்பன் நகர், பச்சையம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவலூர்பேட்டை சாலை மற்றும் போளூர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

 

இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட புகையின் காரணமாக சுவாசக் கோளாறுகள், மூச்சுத் திணறல் மற்றும் தோல் அரிப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்படுவதாகவும் குறிப்பாக கடந்த 21 நாட்களாக இந்த குப்பை கிடங்கு எரிவதால் குடியிருப்புகளை புகை சூழ்ந்து உள்ளதால் தாங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவண்ணாமலை நகராட்சி துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.