விதிகளை மீறியதால் பிரதமருக்கே அபராதம் விதித்த சுகாதாரத்துறை அமைச்சர்

0
78
Fine For Prime Minister-News4 Tamil Online World News
Fine For Prime Minister-News4 Tamil Online World News

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியாத பிரதமருக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பானது உலக நாடுகள் அனைத்திற்கும் பெரும் சவாலாக விளங்கி வருகிறது. இதுவரை இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 4 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு உலக நாடுகளும் தங்களுடைய நாட்டு மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை கட்டாயமாக்க்கியுள்ளது. இதனையடுத்து பெரும்பாலான நாடுகளில் முகக்கவசம் அணியாமல் வீடுகளை விட்டு வெளியே வரும் நபர்களுக்கு அதற்காக அபராதமும் விதிக்கப்படுகிறது

இந்நிலையில், அரசு அறிவுறுத்தியபடி முகக்கவசம் அணியாமல் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக நாட்டின் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி அந்நாட்டு பிரதமருக்கே அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

பொய்க்கோ போரிசோவ்

பல்கேரியா நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக போது இடங்களுக்கு செல்லும் மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசின் உத்தரவை மதிக்காமல் முக்கவசம் அணியாமல் வெளியில் செல்லும் மக்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், பல்கேரியாவின் பிரதமரான பொய்க்கோ போரிசோவ் நேற்று அந்நாட்டின் ரிலா மனொஸ்டோரி நகரில் அமைந்துள்ள ஒரு தேவாலயத்திற்கு சென்றார். அங்கு சென்ற அவர் பிரார்த்தனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

ஆனால், இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் பொய்க்கோ போரிசோவ் அரசு அறிவித்துள்ளது போல முகக்கவசம் அணியவில்லை. மேலும், அவருடன் சென்ற அதிகாரிகள் பெரும்பாலோனோரும்,பத்திரிக்கையாளர்களும் முகக்கவசம் அணியாமல் அரசின் விதிகளை விதிகளை மீறியுள்ளனர்.

இதையடுத்து, வெளியில் செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு விதித்துள்ள உத்தரவு அமலில் உள்ளதை மீறி முகக்கவசம் அணியாமல் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் பொய்க்கோ பொரிசோவ் உள்பட அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர் உள்ளிட்ட அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படுவதாக பல்கேரிய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மந்திரி கூறுகையில், முகக்கவசம் அணியாமல் அரசின் விதிகளை மீறி பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் பொய்க்கோ போரிசோவ் உள்ளிட்ட அனைவருக்கும் தலா 300 லிவ்ஸ் (இந்திய மதிப்பில் 13 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.