இந்தியாவில் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுமா? அறிவியல் குழுக்கள் ஆலோசனை!

0
77

நோய் தொற்று தடுப்பூசி செலுத்துவதற்காக தேசிய நிபுணர் குழுவும், தடுப்பூசி போடும் பணிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவும், நோய் தொற்றுக்கு எதிரான பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பான தகவலை மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது.

இந்நிலையில், டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் ராம் பார்க்கவா தெரிவித்ததாவது, நோய் தொற்றுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து தடுப்பு ஊசி செலுத்துவதற்கான நிபுணர் குழுக்களால் அலசிஆராயப்பட்டு கடைசியாக பரிந்துரைகள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு, அந்த அமைச்சகத்தால் ஏற்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

மேலும் தற்சமயம் இதுகுறித்து நிபுணர் குழுக்கள் ஆலோசித்து வருகின்றன, இது குறித்து நம் நாட்டில் இருந்தும், உலகம் முழுவதிலும் இருந்தும், அறிவியல்பூர்வ தகவல்களை பெற்று வருகின்றோம். அதனடிப்படையில் நாங்கள் எங்களுடைய கொள்கையை உருவாக்குவோம் என்று தெரிவித்தார்.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவிக்கும்போது, பூஸ்டர் டோஸ் செலுத்துவதன் அவசியம், அதற்கான காலம் தொடர்பாகவும், குறைந்த வயதினருக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாகவும், அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் மத்திய அரசு முடிவெடுக்கும் என்று கூறியிருக்கிறார்.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டெட்ராஸ் அதானோம் கெப்ரியிசசின் கருத்தை மேற்கோள் காட்டிய அவர் நோய்தொற்று குறித்த எந்த முன்னெச்சரிக்கை களையும் கடைபிடிக்காமல் திட்டமிட்டபடி கொண்டாட்டங்களை மேற்கொள்வதற்கான டிக்கெட்டாக பூஸ்டரை கருத இயலாது என்று தெரிவித்தார்.