நாடாளுமன்றத்தை நோக்கி பயணித்த விவசாயிகள்! ஜந்தர் மந்தரில் களைகட்டிய போராட்டம்!

0
64
Farmers on their way to Parliament! Weedy struggle at Jantar Mantar!
Farmers on their way to Parliament! Weedy struggle at Jantar Mantar!

நாடாளுமன்றத்தை நோக்கி பயணித்த விவசாயிகள்! ஜந்தர் மந்தரில் களைகட்டிய போராட்டம்!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவசாயிகளுடன் மத்திய அரசு 10 க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும். என்பதில் விவசாயிகள் மிகவும் உறுதியாக இருப்பதால் இந்த பிரச்சினையில் தொடர் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர், கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றத்திற்கு வெளியே தினந்தோறும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஆனால் விவசாயிகளின் இந்த திட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி அளிக்கவில்லை கொரோனாவை காரணம் காட்டி விவசாயிகளுக்கு இந்த போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து தங்கள் போராட்டத்தை டெல்லி ஜந்தர் மந்தருக்கு மாற்ற விவசாயிகள் முடிவு செய்தனர். அதாவது வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி இன்று முதல் தினந்தோறும் ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிவித்தது.

இந்தப் போராட்டத்துக்காக டெல்லி சிங்கு எல்லையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் மூலம் விவசாயிகள் ஜந்தர் மந்தருக்கு சென்றனர். அங்கு அவர்கள் விவசாயி நாடாளுமன்றம் என்ற நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். அதற்காக தினந்தோறும் 200  போராட்டக்காரர்கள் சிங்கு எல்லையிலிருந்து செல்ல உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்தையொட்டி ஜந்தர் மந்தரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிங்கு எல்லையில் இருந்து விவசாயிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சோதனை செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். 200 விவசாயிகள் அடங்கிய குழு போராட்டம் நடத்த ஜந்தர் மந்தர் வந்தடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிங்கு எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஜந்தர் மந்தரை நோக்கிச் சென்றதால் தேசிய தலைநகரின் பல பகுதிகளில் இன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக மூத்த போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேளாண் மந்திரி  நரேந்திர சிங் தோமர், எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுடன் பேச மத்திய அரசு தயாராக உள்ளது. நாங்கள் அவர்களுடன் கடந்த காலத்திலும் பேசினோம். மோடி அரசு ஒரு விவசாயிகளின் நண்பன் என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் நிருபர்களிடம் கூறும்போது, எங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையிலான தொலைவு  குறைந்து கொண்டே வருகிறது. நாங்கள் நாடாளுமன்றத்தில் இருந்து இப்போது சில நூறு மீட்டர் தொலைவில் தான் இருக்கிறோம். இந்த மரத்தின் அடியில் தினமும் 200 விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது ஒரு வரலாற்று மரமாக இருக்கும் என்று அங்கிருந்த வேப்பமரத்தை குறிப்பிட்டு கூறினார்.

விவசாய சங்க தலைவர் ஹன்னன் மொல்லா கூறும்போது எங்கள் கோரிக்கைகளை எழுப்ப அனைத்து எம்பிக்களும் நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். ஆனால் நாடாளுமன்றம் எங்கள் பிரச்சினைகளை எடுத்துக் கொள்ளவே இல்லை என கூறி வேதனைப்பட்டார். இதை பற்றி யோகேந்திர யாதவ் கூறும் போது, விவசாயிகள் முட்டாள்கள் அல்ல. இதை அரசாங்கத்திற்கு நிரூபிக்க விவசாயிகள் ஜந்தர் மந்தர் வந்துள்ளனர். இங்கிலாந்து பாராளுமன்றம் எங்கள் பிரச்சினைகளை விவாதிக்கிறது. ஆனால் எங்கள் அரசு விவாதிக்கவில்லை என்று கவலை தெரிவித்தார்.