3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா! ஜனாதிபதி ஒப்புதல்!

0
109

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஒரு சில நிமிடங்களில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து ஆனதற்கான மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சென்ற ஒரு வருடத்திற்கு மேலாக டெல்லியில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை அரசு சார்பாக நடத்தப்படும் அது தோல்வியில் முடிவடைந்தது.

இந்த சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சென்ற நவம்பர் மாதம் 19ஆம் தேதி மூன்று வேளாண்சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து நவம்பர் மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி கூடிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து விவாதம் நடத்த அனுமதி வழங்காமல் மக்களவையில் 4 நிமிடங்களுக்கு உள்ளும், மாநிலங்களவையில் ஐந்து நிமிடங்களுக்கு உள்ளும், குரல் வாக்கெடுப்பின் மூலமாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த சூழ்நிலையில், வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் வழங்கி கையெழுத்து போட்டிருக்கிறார். தற்சமயம் வேளாண் சட்டங்கள் ரத்து 2021ஐ மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டு இருக்கிறது.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதை விவசாயிகளின் உயிரிழப்புகளும், கடுமையான போராட்டங்களுக்கும், கிடைத்த வெற்றியாக பார்ப்பதாக விவசாய அமைப்புகள் தெரிவித்து வருகின்றன.

ஆனால் இந்த ஒரு வருட காலப் போராட்டத்தில் 700 விவசாயிகள் பலியாகி இருப்பதாக எந்த பதிவும் அரசிடம் இல்லை என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்திருப்பது விவசாயிகளிடையே கோபத்தை உண்டாக்கி இருக்கிறது.