துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள்!! சட்டரீதியாக முறியடிப்போம் பொன்முடிக்கு முதல்வர் ஆறுதல்!!
அமலாக்கத்துறை சோதனையில் சிக்கி உள்ள பொன்முடிக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று தொலைபேசியில் ஆறுதல் அளித்தார்.
நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. பின்னர் அவர் அங்கிருந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு 8 மணி நேர விசாரணை முடிந்து பொன்முடி சைதாபேட்டையில் உள்ள அவரது இல்லம் திரும்பினார்.
இன்று பல்வேறு அமைச்சர்கள் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணைசெய்த நிலையில் அமைச்சர்கள் துரைமுருகன், சி.வி.கணேசன், ஐ.பெரியசாமி ஆகியோர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி இல்லத்திற்கு வருகை தந்தனர்.அங்கு சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் பொன்முடியுடன் தொலைபேசியில் பேசினார். அமலாக்கத்துறை விசாரணை பற்றி கேட்டறிந்த முதல்வர் துணிச்சலுடனும் சட்ட ரீதியாக எதிர்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார்.
மேலும் அவர் கூறுகையில் அமலாக்கத்துறை விசாரணையை துணிச்சலுடனும்,சட்டரீதியாகவும் எதிர்கொண்டால் தான் மத்திய பா.ஜ.க. அரசின் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க முடியும். உங்களுக்கு தார்மீக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மற்றும் சட்டரீதியாகவும் கழகம் எப்போதும் துணை நிற்கும் என முதல்வர் அமைச்சர் பொன்முடியிடம் தெரிவித்தார்.