கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தமிழக அரசு அறிவிப்பு!

0
139

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க வேண்டிய கட்டணமில்லா இலவச தொலைப்பேசி சேவையை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் போக்குவரத்து சேவை அனைத்தும் முடக்கப்பட்டன. பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவித்து வந்த நிலையில் கடந்த மாதம் முதல் ஆம்னி பேருந்துகள் இயப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நடப்பாண்டுக்கான தீபாவளி பண்டிகையானது வருகிற 14ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு வருகிற 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை சென்னையில் இருந்து 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது போன்ற பண்டிகை காலத்தில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது.

இதனை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த கூடுதல் கட்டணக் கொள்ளை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க தமிழக அரசு கட்டணமில்லா தொலைபேசி சேவையை அறிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
‘தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 11.11.2020 முதல் 18.11.2020 வரை இயக்கப்பட உள்ள ஆம்னி பேருந்துகளில் பயணிகள் ஆம்னி பேருந்துகளில் வழக்கத்திற்கு புறம்பாக அதிக கட்டணம் வசூல் செய்வது மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க தமிழக அரசு கட்டணமில்லா தொலைபேசி சேவை (Toll Free – 1800 425 6151) மூலம் புகார் தெரிவிக்கலாம்.

சட்டத்துக்குப் புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க சரக அளவில் சிறப்பு செயலாக்கப் பிரிவின் (Special Flying Squad) மூலம் தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Parthipan K