தமிழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு! அமைச்சர் தகவல்!!

0
123

தமிழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு! அமைச்சர் தகவல்!!

கொரோனா பெருந்தொற்று மற்றும் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் பரவல் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் தற்போது வரை இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மட்டும் 4 ஆயிரத்தை கடந்துவிட்டது.

இதன் காரணமாக நாட்டில் தொற்றின் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவற்றை கட்டுப்படுத்த அந்தந்த மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு என அறிவித்து சில கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன.

அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றின் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக அதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாத இறுதியில் ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு அவை நடைமுறைபடுத்தப்பட்டன.

அதனை தொடர்ந்து கடந்த வாரம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் பல்கலைக்கழகத் தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எழுத்துத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டாலும், செய்முறைத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும், தமிழத்தில் கொரோனா பரவல் பாதிப்பு குறைந்த பின்னர் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த விடுமுறை நாட்களில் கல்லூரிகள், வகுப்புகள் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரித்துள்ளார். மேலும், கல்லூரிகள் திறப்பு குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K