இன்ஜினியர் ஆணவக் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு ஆயுள்  தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்! 

0
135
#image_title

இன்ஜினியர் ஆணவக் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு ஆயுள்  தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்! 

நாமக்கல்லில்  இன்ஜினியர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட் இன்று உறுதி செய்தது.

சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவர்  சுவாதி என்ற பெண்ணை காதலித்து வந்ததால் நாமக்கல் அருகே தொட்டிபாளையம் ரயில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்துள்ளார். விசாரணையில் இவர் ஆணவக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கு ஐகோர்ட் உத்தரவின் பேரில் மதுரை சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அங்கு இந்த வழக்கானது விசாரணை செய்யப்பட்டு சாட்சியங்களும் விசாரிக்கப்பட்டன. இந்த கொலை வழக்கில் கைதான யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும்,  மீதமுள்ள 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்டத்தில் உள்ள கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 8-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இதனால் இந்த தீர்ப்பை எதிர்த்தும் தண்டனையை ரத்து செய்யக் கோரியும் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தொடுத்தனர்.

இதில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மேல் முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணையில் ஹை கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் நீதிபதிகள் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோர் மீது தொடுத்த குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபணம் ஆகியுள்ளது. மதுரை கோர்ட் அளித்த தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை.

எனவே யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மீதான ஆயுள் தண்டனை உறுதி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் ஆயுள் முழுவதும் சாகும் வரை சிறையில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.