சொந்த மகனாலேயே அடித்து கொல்லப்பட்ட தந்தை! மனநிலை பாதிப்பால் ஏற்பட்ட விபரீதம்!

0
115

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள ஏரியூர் அருகே இருக்கின்ற அங்கப்பன் கொட்டாய் என்ற பகுதியில் வசித்து வருபவர் 70 வயதான முதியவர் குமரன். இவர் கூலி தொழில் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவருடைய இரண்டாவது மகன் தங்கராஜ் இவருக்கு வயது 40 இவர் சொந்தமாக லாரி வைத்து அதன் மூலம் தொழில் செய்து வருவதாக தெரிகிறது.

.இவருக்கு திருமணம் நடைபெற்று ராஜேஸ்வரி என்ற துணைவியாரும் 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில், தங்கராஜ் ஒரு வீடு கட்டி வந்திருக்கிறார்.

கட்டிட ஒப்பந்தக்காரர் சரியான காலகட்டத்திற்குள் கட்டுமான பணியை முடித்து தரவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே தங்கராஜ் மற்றும் ஒப்பந்ததாரருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, கட்டிட பணி பாதியிலேயே நின்று போனது.

இதற்கு நடுவில் தங்கராஜின் தந்தையான குமரன் அந்த கட்டிட ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக தங்கராஜிடம் பேசியுள்ளார். இதன் காரணமாக, கோபமடைந்த தங்கராஜ் கடந்த சில தினங்களாக மனநிலை பாதிக்கப்பட்டவரை போல இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் நேற்று காலை வீட்டில் வைத்திருந்த இரும்பு கம்பியால் தன்னுடைய தந்தை குமரனை சரமாரியாக தாக்கியுள்ளார் தங்கராஜ்.

இந்த தாக்குதலில் பலத்த காயத்திற்குள்ளான குமரன் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆனாலும் கோபம் குறையாத தங்கராஜ், அந்தப் பக்கமாக சாலையில் சென்ற பால் வண்டியின் டிரைவரை தாக்கி இருக்கின்றார்.

இந்த தாக்குதலில் அவர் காயம் அடைந்திருக்கிறார். இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் தங்கராஜை பிடித்து கட்டி வைத்து ஏரியூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.

அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைவாக வந்த ஏரியூர் காவல் துறையினர் தங்கராஜிடம் விசாரித்தனர். அப்போது தன்னுடைய தந்தையை தான் அடித்துக் கொன்றதாக காவல்துறையினரின் விசாரணையில் அவர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் கொலையுண்ட குமரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதோடு இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகிறார்கள்.