உச்சத்தில் முட்டை விலை! தேவை அதிகரிப்பால் மேலும் உயர்த்திய என்சிசி!

0
126

உச்சத்தில் முட்டை விலை! தேவை அதிகரிப்பால் மேலும் உயர்த்திய என்சிசி!

தேவை அதிகரிப்பால் முட்டையின் விலை வரலாறு காணாத அளவில் அதிரடியாக உயர்ந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளும் முட்டை உற்பத்தியும் அதிகம். இங்குள்ள 1100 கோழி பண்ணைகளில் சுமார் 7 கோடி முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இவைகள் மூலம் தினமும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வாரம் மூன்று கோடி முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு அனுப்பப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் மட்டுமல்லாமல் கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கும் நாமக்கல் முட்டைகள் செல்கின்றன.

கோழி பண்ணைகளில் உற்பத்தியாகும் பெரிய முட்டைகளுக்கு என்சிசி வாரம் மூன்று முறை விலை நிர்ணயம் செய்கிறது. இதன்படி 52 கிராம் அளவு கொண்ட பெரிய முட்டைக்கு என்சிசி கடந்த ஒரு வார காலமாக பண்ணை கொள்முதல் விலை 550 காசாக நிர்ணயித்து இருந்தது. வடமாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. எனவே அங்கு தற்போது முட்டையின் தேவையும் அதிகரித்துள்ளது. அனைத்து மண்டலங்களிலும் முட்டை விலை உயர்த்தப்பட்டதால் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டை விலையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் என்சிசி யின் மண்டல சேர்மன் டாக்டர் செல்வராஜ் நேற்று முட்டையின் விலை 5 காசுகள் உயர்த்தி 555 காசு ஆக விலைநிர்ணயம் செய்துள்ளார். கடந்த 40 ஆண்டுகால கோழி முட்டை வரலாற்றில் இதுவே அதிகபட்ச விலை ஆகும். இதற்கு முன்பு இரண்டு முறை விலை உயர்ந்து 550 காசுகளாக இருந்தது. தற்போது அதைவிட ஐந்து காசுகள் மேலும் உயர்ந்துள்ளது.

விலை உயர்வு பற்றி என்சிசி நிர்வாகிகள் கூறுகையில் ஒரு முட்டையின் உற்பத்தி செலவு 475 காசுகள் முதல் 480 காசுகள் ஆகின்றது. மேலும் விலை உயர்ந்தால் தான் பண்ணையாளர்கள் கோழி பண்ணை தொழிலை இலாபகரமாக செய்ய முடியும். இதனை அடுத்து கொள்முதல் விலை உயர்ந்ததால் சில்லறை விற்பனை விலையும் ரூ 650 காசுகளாக உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.