வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம்! அதிமுக அரசுக்கு பாமக வைத்த செக்!

0
72

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம்! அதிமுக அரசுக்கு பாமக வைத்த செக்!

பாமகவின் நீண்ட நாள் மற்றும் தற்போதைய கோரிக்கையான வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரவில்லை எனில் எடப்பாடியின் முதல்வர் கனவு முடிந்து போகும் என்று வன்னியர் சமுதாயத்தினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

வன்னியர் மக்களின் நீண்ட நாள் கனவான வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு விகாரத்தை டாக்டர் ராமதாஸ் தேர்தல் நேரத்தில் கையில் எடுத்துள்ளதால் அதை நிறைவேற்றியே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளார் எடப்பாடி.

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரவில்லை எனில் பாமக வானது கூட்டணியிலிருந்து வெளியேறவோ அல்லது திமுகவோடு கூட்டணி வைக்கவோ அல்லது தனியாக நிற்கவோ வாய்ப்புள்ளது. பாமக அதிமுக அரசுடன் இணக்கமாக இருக்கும் வரையில் எடப்பாடிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் பாமக எதிர்கட்சியான திமுகவுடன் கூட்டணி வைத்தாலோ அல்லது தனியாக நின்றாலோ அதிமுக அரசுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்.

ஏற்கனவே இடைத்தேர்தலில் தோற்க வேண்டிய அதிமுக அரசுக்கு மீண்டும் உயிர் தந்தது பாமக தான். நாங்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விக்கிரவாண்டியில் அதிமுக அரசு வெற்றி பெற முழு காரணம் பாமக தான். அதை எடப்பாடி அவர்களே பலமுறை பிரச்சார மேடையில் ஒப்புக்கொண்டுள்ளார். விக்கிரவாண்டி ஆண்டாண்டு காலமாக வன்னியர்களின் கோட்டையாக இருந்த தொகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பாமக அதிமுக அரசு ஆட்சி கலையாமல் இருக்க காரணமாக இருந்தது.

முக்கியமாக வட தமிழகத்தில் அதிமுக வெற்றி பெற வேண்டுமெனில் வன்னியர்களின் ஓட்டு அவசியம். இதனால் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தரவில்லை எனில் வடதமிழகத்தில் அதிமுக அரசு மிகக் குறைவான இடங்களே கிடைக்கும். அதனால் ஆட்சியையும் இழக்கும் நிலை வரும்.

இதை அறிந்த பாமக நிறுவனர் ராமதாஸ் இது தான் சரியான தருணம் என்று சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் தனது சமுதாய மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பொருளாதாரத்திலும் இன்னும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் வன்னியர்களுக்கு மட்டும் 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று மிகப்பெரிய ஒரு கோரிக்கை முன்வைத்தார்.

பலமுறை எழுத்துப்பூர்வமான கோரிக்கை வைத்தும் எடப்பாடி அவர்கள் எந்தவித அறிவிப்பும் அறிவிக்காததால் கோபமுற்ற மருத்துவர் ராமதாஸ் டிசம்பர் 1 ல் இட ஒதுக்கீடு போராட்டம் 2.0 வை அறிவித்தார். சென்னையில் போராட்டத்தை ஆரம்பித்த அன்று மொத்த சென்னையும் ஸ்தம்பித்தது. போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாமகவினரை காவல்துறையினர் தடுத்ததால் ஆக்ரோஷமான வன்னிய இளைஞர்கள் ஓடும் ரயிலை மறித்தார்கள்.மேலும் பல இடங்களில் பாமகவினர் சென்னைக்கு வருவதை ஆங்காங்கே போலீஸ்காரர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.ஆனால் அன்றோடு இந்த போராட்டம் முடிவுபெறவில்லை .இது வெறும் ட்ரெய்லர் தான் முழு போராட்டமும் அடுத்த வருடம் ஜனவரியில் தான் ஆரம்பிக்கிறது என்று மாஸ் ஆக ஒரு அறிவிப்பை அறிவித்தார் மருத்துவர் ராமதாஸ்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி முழித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி. பாமகவை கழட்டி விட்டால் எடப்பாடியின் முதல்வர் கனவு கலைந்து விடும். பாமகவின் கோரிக்கையான வன்னியர்களின் தனி இட ஒதுக்கீட்டை நிறைவேற்றினால் மற்ற சமுதாயங்களை எப்படி சமாளிப்பது என்றும் பலமுனையில் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

பாமகவுக்கு எப்பொழுதும் 6 சதவீத ஓட்டுக்கள் அவர்கள் சட்டைப்பையில் உள்ளவாறு உறுதியாக இருக்கும். இந்த 6 சதவீத ஓட்டுக்கள் தான் நாளை தமிழகத்தை யார் ஆள்வது என்பதை முடிவு செய்யும்‌. அதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் பெரும் குழப்பத்தில் முதல்வர் உள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
Parthipan K