சொந்த மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு தமிழக முதல்வர் வெளியிட்ட புதிய அறிவிப்பு

0
60
Edappadi Palanichamy
Edappadi Palanichamy

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கபட்டிருப்பதால் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இந்நிலையில் வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கபட்டிருந்தனர்.

இதனையடுத்து வெளிமாநிலத்தில் இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு செல்ல அந்தந்த மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது

இவ்வாறு வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு ரெயில் மூலம் செல்ல தமிழக அரசு ஏற்பாடு செய்வதால், அவர்கள் யாரும் தன்னிச்சையாக செல்ல வேண்டாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது.

வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

6-ந் தேதியில் இருந்து 15-ந் தேதிவரை 55 ஆயிரத்து 473 வெளிமாநில தொழிலாளர்கள் 43 ரெயில்களில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், ஆந்திரா, மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தினந்தோறும் சுமார் 10 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து வெளிமாநில தொழிலாளர்களும் அவர் தம் விருப்பத்தின் பேரில் படிப்படியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதியோடு அவர் தம் மாநிலங்களுக்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், ரெயில்வே கட்டணம் உட்பட அனைத்து பயணச் செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்வதால், வெளிமாநில தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடை பயணமாகவோ, பிற வாகனங்களின் மூலமாகவோ செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அதுவரை, வெளிமாநில தொழிலாளர்கள் தற்போது தங்கியிருக்கும் முகாம்களிலேயே தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.