சூறாவளியாய் சுழன்று அடிக்கும் எடப்பாடி அலை! எதிர்நீச்சல் போட்டு பார்க்கும் திமுக!

0
84

வரும் ஏப்ரல் ,அல்லது மே, மாதங்களில் தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று சொல்லப்படுகின்ற நிலையில், தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மூழ்கி இருக்கின்றன.

அந்த வகையிலே, தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும், தேர்தல் பணிகளில் மிகத் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. அதிமுக சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை டிசம்பர் மாதம் 19ஆம் தேதி தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதேபோல எதிர்க்கட்சியான திமுகவும், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பிலே பிரச்சார பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. அதோடு மாவட்டங்கள் தோறும் அதிமுகவை நிராகரிப்போம் என்ற பெயரில் மக்கள் கிராம சபை கூட்டத்தையும் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அது மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

இந்த திட்டங்கள் ஆனது மக்களிடையே அதீத வரவேற்ப்பை பெற்றதை கண்டு திமுக மிகுந்த கலக்கம் அடைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே அதிமுகவிற்கு எதிராகவும், முதலமைச்சருக்கு எதிராகவும், அவர்கள் செயல்படுத்தும் திட்டங்களில் பல்வேறு இடையூறுகளை திமுக செய்துவருவதாக தெரிவிக்கிறார்கள்.

அதிமுகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், மக்கள் நல திட்டங்களை எதைச்செய்தாலும் அதை திமுக எப்போதும் குறை கூறிக் கொண்டே இருக்கிறது என்று அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவின் ஒரு முக்கிய அமைச்சர் திமுக அனைத்திலுமே அரசியல் செய்கின்றது என்று விமர்சனம் செய்தார் அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சி என்றால் அரசியல் தான் செய்யும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் அந்த சமயத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. எதிர்க்கட்சி என்றால் ஆளும் கட்சி நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் எப்பொழுதும் குறை கொண்டே இருக்க வேண்டுமா? எதிர்க்கட்சி என்பது ஆளுங்கட்சி தவறு செய்தால் அதனை சுட்டிக்காட்ட வேண்டும், அதே போல மக்களுக்கு நல்லது செய்தால் அதை வரவேற்க வேண்டும் .அப்படி இல்லாமல் திமுகவின் அது எப்பொழுதுமே ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக பொதுமக்களும், அதிமுக நிர்வாகிகளும் ஆதங்கப் படுவதாக சொல்லப்படுகிறது.

அதோடு மட்டுமன்றி தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக திமுக ஒரு சில கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகிறது என்றும் பரவலாக பேச்சுக்கள் அடி படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் மத்தியிலே அதிமுகவிற்கு நற்பெயர் இல்லை, அதிமுகவின் ஆட்சியானது விரைவில் களைந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த எதிர்க்கட்சியான திமுகவிற்கு ஆளும் கட்சியின் வளர்ச்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக சொல்கிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த ஒரு சில அதிரடி நடவடிக்கையின் காரணமாக, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. அது எந்த அளவிற்கு என்று கேட்டால், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சியானதிமுக வை முழுமையாக புறக்கணிக்கும் அளவிற்கு என்று சொல்லப்படுகிறது.

பிரசாந்த் கிஷோர் குழுவை வைத்து திமுக சார்பாக ஒரு ரகசிய சர்வே செய்ததில் இந்த அதிர்ச்சி உண்மை திமுகவிற்கு தெரியவந்திருக்கிறது .இதன் காரணமாகவே திமுக அதிமுகவை நிராகரிக்கின்றோம் என்ற கிராமசபை கூட்டங்களை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் என்னதான் திமுக வரிந்துகட்டிக்கொண்டு அதிமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தாலும், மக்களிடம் அதிமுகவிற்கு வரவேற்பு குறைந்தபாடில்லை. அதன் காரணமாகத்தான், அதிமுக என்ன செய்தாலும் அதனை குறை கூறிக்கொண்டே இருக்கிறது திமுக என்று தெரிவிக்கிறார்கள்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொள்வதை எதிர்த்ததும், சமீபத்தில் முதலமைச்சர் அறிவித்த பொங்கல் பரிசுத் திட்டத்தை விமர்சனம் செய்ததும் இதற்கு சான்று ஆகிப்போனது.

எங்கே திமுகவிற்கு வாக்கு சதவீதம் குறைந்து விடுமோ? என்ற காரணத்திற்காகவே, பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் தலைவர்களின் புகைப்படம் இடம் பெறக்கூடாது என்று நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்ததாகவும், நியாயவிலை கடைகளில், முதலமைச்சர் புகைப்படம் இடம்பெற்ற சுவரொட்டிகள் இருப்பதையும், திமுக நீதிமன்றத்தில் முறையிட்டு இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

என்னதான் கோடி கோடியாக செலவழித்து தேர்தல் பிரச்சார வியூகத்துக்கு என தனி குழுவை அமைத்து, அந்தக் குழுவின் ஆலோசனையின்படி பிரச்சாரம் மேற்கொண்டாலும் திமுகவால் அதிமுகவின் செயல்பாட்டிற்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆகவேதான், அதிமுக செய்யும் ஒவ்வொரு செயலையும் விமர்சனம் செய்துகொண்டே இருக்கிறது திமுக என்று சொல்கிறார்கள்.

கோடிகோடியாக பணம் செலவழித்து கட்சி நிர்வாகிகளை பிழிந்து வேலை வாங்கும் அளவிற்கு தேர்தல் பிரச்சாரத்தை ஓய்வின்றி திமுக செய்து வந்தாலும், அதனை அதிமுக எதிர்கொள்ளும் விதம் மிக சாதுரியமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஊருக்கு ஊர் மேடை போட்டு அதிமுகவை பற்றி ஆயிரம் குற்றம் குறைகளை சொன்னாலும்கூட, அதனை அதிமுக மிக நேர்த்தியாக சாதுர்யமாக கையாண்டு அந்த விமர்சனங்களை நீர்த்துப்போகச் செய்து விடுகிறதாம். இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்று பிரசாந்த் கிஷோருக்கே தெரியவில்லை என்று பரவலாக பேசப்படுகிறது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, பிராமணர்களின் எதிர்ப்பால் வளர்ந்த கட்சி திமுக என்ற காரணத்தால், பீகார் பிராமணரான பிரசாந்த் கிஷோர் சில பல உள்ளடி வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பேசப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளுக்குள் பீதியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

முதல்வரின் இமேஜை பொதுமக்களிடையே குறைப்பதற்காக ஆயிரமாயிரம் குற்றச்சாட்டுகளையும்,விமர்சனங்களையும், திமுக முன் வைத்தாலும் கூட பொதுமக்களிடையே முதல்வருக்கு இருக்கும் இமேஜ் குறைந்தபாடு இல்லை. இதனால் திமுக வெறுத்துப் போய் இருப்பதாக ஒரு சாரார் தெரிவிக்கிறார்கள்.

ஒருபுறம் பிரசாந்த் கிஷோர் திமுகவிற்கு எந்த அளவிற்கு பலமாக இருப்பார் என்று திமுக தலைமை சிந்தித்தாலும், மறுபுறம் ஸ்டாலினின் சகோதரரான அழகிரி புதிய கட்சி தொடங்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது திமுகவிற்கு மேலும் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அழகிரி கட்சி தொடங்கினால் திமுகவில் இருக்கும் பெரும்பாலானோர் அவர் பக்கம் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஸ்டாலின் கலங்கி போய் இருப்பதாக சொல்கிறார்கள்.