கொரோனா உயிரிழப்புகளை தடுக்க மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் மருத்துவர்! செவி சாய்க்குமா தமிழக அரசு?

0
87

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் முன்பிலிருந்தே தமிழகத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசும், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவரான அன்புமணி ராமதாஸ் அவர்களும் பல்வேறு வகையில் மத்திய மாநில அரசுகளுக்கு ஆலோசனை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஊடகங்களும் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை மக்களுக்கு கொண்டு சேர்த்த வண்ணமேயுள்ளன.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மீண்டும் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் “கொரோனா: உயிரிழப்புகளைத் தடுக்க சோதனைகளை அதிகரிக்க வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பது அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. கொரோனா பாதிப்பு மிகவும் தாமதமாக கண்டறியப்பட்டது தான் உயிரிழப்புகளுக்கு காரணம் என்று வல்லுனர்கள் கூறியுள்ள நிலையில், நோய்த்தொற்று முற்றுவதற்கு முன்பாகவே, அதை கண்டுபிடித்து சிகிச்சை தொடங்குவது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.

கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதலால் தமிழ்நாட்டில் இதுவரை 220 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 167 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 வயது சிறுமி அடுத்த 4 மணி நேரத்தில் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. அதுமட்டுமின்றி கடந்த வாரம் வரை 0.67% ஆக இருந்து வந்த உயிரிழப்பு விகிதம், இப்போது 0.80% ஆக அதிகரித்திருக்கிறது. இந்திய சராசரியுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு என்றாலும் கூட, தமிழகத்தின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவது நமக்கு கூடுதல் எச்சரிக்கை தேவை என்பதை உணர்த்துகிறது.

சென்னையில் உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதற்கு காரணம் நோய் பாதிப்புகள் மிகவும் தாமதமாக கண்டுபிடிக்கப்படுவது தான் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளனர். நேற்று உயிரிழந்த 17 வயது சிறுமி தான் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தவர்களில் மிகக்குறைந்த வயதுடையவர் ஆவார். அவருக்கு முதல் வகை நீரிழிவு நோய் உள்ளிட்ட சில குறைபாடுகள் இருந்தாலும் கூட, அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதை முன்கூட்டியே கண்டுபிடித்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்பது தான் மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து சிகிச்சையளிக்க வேண்டியதன் அவசியத்தை இந்நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன.

Dr Ramadoss News4 Tamil Online Tamil News
Dr Ramadoss News4 Tamil Online Tamil News

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால், சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தான் ஒரே தீர்வாகும். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கிய நாளில் இருந்தே இதை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது; மருத்துவ வல்லுனர்களும் இதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதை உணர்ந்து தமிழக அரசு கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா சோதனைகளை அதிகரித்திருக்கிறது. கடந்த 2&ஆம் தேதி 11,094 சோதனைகளும் 3&ஆம் தேதி 14,101 சோதனைகளும் செய்யப்பட்ட நிலையில், நேற்று 16,447 சோதனைகளை செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க மாற்றமாகும்.

சென்னையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, இன்னும் கண்டுபிடிக்கப் படாமல் இருப்பதாக தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வல்லுனர்கள் குழுவே முதலமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த எண்ணிக்கை இப்போது சற்று கூடுதலாகியிருக்கக் கூடும். அவர்களை விரைந்து கண்டுபிடித்து மருத்துவம் அளிக்க வேண்டுமானால், சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 10 ஆயிரம் பேராவது ஒரு நாளைக்கு கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இப்போது 74 ஆய்வகங்கள் உள்ள நிலையில், அவற்றில் தினமும் அதிகபட்சமாக 30,000 சளி மாதிரிகளை ஆய்வு செய்ய முடியும். நேற்றைய நிலவரப்படி ஆய்வுகளின் எண்ணிக்கையை 16,447 ஆக அதிகரித்துள்ள தமிழக அரசு, படிப்படியாக முழுத்திறனையும் எட்டுவதற்கு முன்வர வேண்டும்.

அவ்வாறு செய்வதன் மூலம் அடுத்த சில நாட்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது இருப்பதை விட பல மடங்கு அதிகரிக்கும் என்றாலும் கூட, அடுத்த சில வாரங்களில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்தி விட முடியும்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது முழுக்க முழுக்க அரசின் கடமை என்று நினைத்து பொதுமக்கள் ஒதுங்கி இருந்து விடக் கூடாது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்கள் தான் என்பதால், அவர்கள் தான் அரசின் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மிகச்சிறிய அளவில் நோய் அறிகுறிகள் இருந்தால் கூட அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று கொரோனா ஆய்வு செய்து கொள்ள வேண்டும்; அதேபோல், நோய்பாதித்த பகுதிகளில் உள்ளவர்கள் தாங்களாக முன்வந்து ஆய்வு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தொடங்கப் பட்டு அவர்கள் காப்பாற்றப்படுவது உறுதி செய்யப்படுகிறது; அதுமட்டுமின்றி, அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுவதும் முழுமையாக தடுத்து நிறுத்தப்படுகிறது.

எனவே, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகளை படிப்படியாக 30 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகபட்சமாக ஒரு சில நாட்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்கான அரசின் நடவடிக்கைகளுக்கு சென்னையின் அனைத்து பகுதிகளில் வாழும் மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

author avatar
Ammasi Manickam