தீபாவளி தந்தேரஸ் திருநாளில் செய்ய கூடியது! செய்ய கூடாதது என்னென்ன? 

0
112

தீபாவளி தந்தேரஸ் திருநாளில் செய்ய கூடியது! செய்ய கூடாதது என்னென்ன?

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடும் அதே நாளில் வட இந்தியாவில் தீபாவளி பண்டிகையானது தந்தேரஸ் என்ற பெயரில் கொண்டாடப்படும். இந்த தந்தேரஸ் தினத்தன்று செல்வ வளம் மற்றும் மகிழ்ச்சி பெருக மக்கள் விளக்கேற்றி, தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்து  கொண்டாடப்படுகிறது.

இந்துக்களால் மிக உற்சாகமாக, கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையாக இது உள்ளது. இந்த நாளில் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட புதிய பொருட்கள் வாங்கியும், மகாலட்சுமி மற்றும் குபேரரை வழிபட்டும் மக்கள் இந்த தந்தேரஸ்  தினத்தை கொண்டாடுகிறார்கள்.

தந்தேரஸ் பண்டிகையை தந்திரியோதசி என்று அழைக்கிறோம். இந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி தந்தேரஸ் விழா கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் துவக்க நாளான தந்தேரஸ் நாளில் வீடுகளை அலங்கரித்தும், கோலமிட்டு, விளக்கேற்றியும், சகோதர பூஜை உள்ளிட்ட பூஜைகள் செய்தும் இதனை கொண்டாடுகின்றனர்.

மேலும் படிக்க: தீபாவளி – தந்தேரஸ் தினம் :  விளக்கு ஏற்றுவது ஏன்?  அதன் சிறப்புகள் மற்றும் செல்வ பூஜை!  புராணங்கள் சொல்லும் கதை

என்னவெல்லாம் செய்யலாம் :

1. இந்த நாளில் வீட்டிற்கு துடைப்பம் வாங்கலாம். துடைப்பம் என்பது வீட்டை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தக் கூடிய பொருள் என்பதால் மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களில் ஒன்றாக துடைப்பமும் கருதப்படுகிறது.
2. தந்தேரஸ் தினத்தில் வீட்டிற்கு மகாலட்சுமி வரும் நாளாக கருதப்படுவதால், அந்த நாளுக்கு முன்பாகவே வீட்டை சுத்தம் செய்து வைக்க வேண்டும்.
3. தந்தேரஸ் நாளில் கோ பூஜை செய்வது, பசு மாட்டை வணங்குவது சிறப்பானது. இந்த நாளில் பசு மாட்டிற்கு உணவளிக்க வேண்டும்.

4. மருத்துவத்தின் கடவுளாக கருதப்படும் தன்வந்திரி பகவானை வழிபட உகந்த நாள். தன்வந்திரி பகவானின் அருளை பெற இந்த நாளில் உடல்நிலை சரியில்லாதவர்களின் மருத்துவ செலவிற்கு உதவுவது, மருந்துகள் வாங்கிக் கொடுப்பது போன்ற உதவிகளை செய்யலாம்.

5. மகாலட்சுமியையும், குபேரரையும் அவர்களுக்குரிய மந்திரங்களைச் சொல்லி வழிபட வேண்டும்.

செய்யக் கூடாதவைகள்

1. இந்த அற்புதமான நாளில் கத்தி, கத்திரிக்கோல் போன்ற ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய கூர்மையான பொருட்களை வாங்கக் கூடாது.

2. பாரம்பரிய முறையிலான புதிய பொருட்களை வாங்குவது மட்டுமே வளம் சேர்க்கும் என்பதால் இது போன்ற பொருட்களை விற்பதையும் மக்கள் தவிர்க்க வேண்டும்.

3. அசைவ உணவுகளையும், உணர்ச்சிகளை தூண்டக் கூடியதாக சொல்லப்படும் வெங்காயம், பூண்டு, முட்டை போன்ற உணவுகளை தவிர்த்து சாத்வீகமான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். போதை வஸ்துக்களையும் பயன்படுத்தக் கூடாது.

4. இந்த நாளில் கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது. இது போன்ற செயல்கள் தீமையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

5. வீடு முழுவதும் விளக்கேற்றி பிரகாசமாக வைத்திருக்க வேண்டும். எந்த இடத்தையும் இருள் சூழ்ந்து இருக்க விடக் கூடாது.