காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் களமிறங்கும் திமுக

0
151

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் களமிறங்கும் திமுக

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் இன்று டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி. ஆர்.பாலு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.

அரசியல் கட்சி தலைவர்களோ,பொது மக்களோ என யாருமே எதிர்பார்க்காத சூழ்நிலையில் ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரிக்கவும் அதன் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யவும் கடந்த இரண்டு வாரம் முன் பாஜக தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதாவை மத்தியில் இரண்டு அவைகளிலும் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியது.

இந்திய அரசியல் வரலாற்றில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்த இந்த தைரியமான முடிவை பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள்,ஊடகவியலாளர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் ஆரம்பத்திலிருந்தே இதை சில எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் இதுவரை காஷ்மீர் விவகாரத்தில் எந்த கட்சியும் துணிந்து போராட்டத்தில் இறங்கவில்லை. ஆனால் அதை முடியடிக்கும் வகையில் திமுக இந்த போராட்டத்தை தற்போது கையில் எடுத்துள்ளது.

தொடக்கத்தில் இருந்தே இந்த மசோதாவை இரண்டு அவையிலும் திமுகவும்,அதன் தேசிய அளவிலான கூட்டணி கட்சிகளும் மிகவும் கடுமையாக எதிர்த்து வந்தன. தமிழகத்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக போன்ற கட்சிகளும் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வந்தது.

இந்த விவகாரத்தில் தொடர்ந்து திமுகவும்,அதன் கூட்டணி கட்சிகளும் மிகவும் உறுதியான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் இன்று டெல்லியில் திமுக எம்பிக்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் என எல்லோரும் சேர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.

இன்று நடைபெறும் இந்த போராட்டத்தில் ஜம்மு-காஷ்மீரில் வீட்டு சிறையில் இருக்கும் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், அங்கு உடனே ஒடுக்குமுறை சட்டங்களை திரும்ப பெற வேண்டும், அங்கு இணைய இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்த உள்ளன.

டெல்லியில் நடைபெறவுள்ள இந்த போராட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதசார்பற்ற ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் , பகுஜன் சமாஜ் ஆகிய கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நடத்தவுள்ள இந்த போராட்டம் காரணமாக டெல்லி ஜந்தர் மந்தரில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் காஷ்மீர் விவகாரத்தில் அங்கு இன்று போராட்டம் செய்யும் இவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K