ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் கொடுத்த வாக்குறுதியை கண்டு கொள்ளாத திமுக! ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு 

0
82
O Panneerselvam
O Panneerselvam

ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் கொடுத்த வாக்குறுதியை கண்டு கொள்ளாத திமுக! ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை செவி கொடுத்து கூட கேட்கவில்லை என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இயன்றவரை நோய் இல்லாத வாழ்வை மக்கள் பெறுவதை உறுதி செய்யும் பணியில் பெரும் பங்கு வகிப்பவர்கள் அரசு மருத்துவர்கள். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த மருத்துவர்கள், இன்று பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது உண்மையிலே மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ்நாடு அரசு மருத்துவர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2019-ம் ஆண்டு காலவரையற்ற போராட்டம் நடத்தினர்.

சில மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் மேற்கொண்டனர். அப்போது, போராட்டக் களத்தில் உள்ள மருத்துவர்களை நேரில் சென்று சந்தித்த அப்போதைய எதிர்கட்சித் தலைவரும், இன்றைய முதல்வருமான ஸ்டாலின், தனது ஆதரவை தெரிவித்தார். திமுக ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்தையும் மருத்துவர்களிடம் தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அரசு மருத்துவர்களின் கோரிக்கையை செவி கொடுத்து கேட்கக்கூட அரசு தயாராக இல்லை என்று செய்திகள் வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 354-ஐ உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டக் குழு நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்டுள்ள பழிவாங்கும் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் கூறியுள்ளார்.