தமிழகத்திலும் ஊடுருவியது புதியவகை நோய்த்தொற்று? நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு அறிகுறி!

0
81

சென்னை அறிஞர் அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் அதிக ஆபத்து ஏற்படக்கூடிய 12 நாடுகளை சார்ந்தவர்கள் மற்றும் குறைந்த ஆபத்து ஏற்படக்கூடிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு முன்னெடுக்கப்படும் நோய்த்தொற்று பரிசோதனைகளை நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், கிண்டி கிங் மருத்துவமனை இயக்குனர் நாராயணசாமி, உள்ளிட்டோர் உடன் இருந்தவர்கள். ஆய்வுக்கு பிறகு அமைச்சர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, உருமாறிய நோய்த்தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 50க்கும் அதிகமான நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 41 பேருக்கு இந்த உருமாறிய நோய்த்தொற்று பரவியிருப்பது கண்டறியப்பட்டது என கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலத்தில் எல்லா சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து அதாவது, அதிக ஆபத்து உண்டாக்க கூடிய 12 நாடுகள் மற்றும் குறைந்த ஆபத்து நிறைந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. அதிக ஆபத்து உண்டாக்கக்கூடிய 12 நாடுகளிலிருந்து வரும் எல்லா பயணிகளுக்கும் முழுமையான நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளின் அடிப்படையில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். நோய்த்தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வாரகாலம் தங்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள் என கூறியிருக்கிறார்.

அதேபோல குறைந்த ஆபத்து உண்டாக்க கூடிய நாடுகளில் இருந்து வருகை தருபவர்களின் 2% நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு பரிசோதனையின் முடிவுகளை தொற்று பாதித்தவர்கள் மருத்துவமனைகளிலும், தொற்று பாதிப்பு இல்லாதவர்கள் அவர்களுடைய வீடுகளுக்கும், அனுப்பி வைக்கப்படுகிறார்கள். கடந்த ஒரு வார காலத்தில் அதிக ஆபத்து ஏற்படும் நாடுகளிலிருந்து வந்த 11489 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

குறைவான ஆபத்து உண்டாகும் நாடுகளிலிருந்து 58 ஆயிரத்து 745 பயணிகள் வந்ததில் ஒரு உத்தேசமாக 2 சதவீதம் அடிப்படையில் 1699 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அந்த ரதத்தில் இதுவரையில் 37 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில் நான்கு பேருக்கு சாதாரண வைரஸ் தொற்று தான் என பெங்களூருவில் இருக்கின்ற ஆய்வகத்தால் முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

மீதம் இருக்கின்ற 33 பேரும் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் மற்றும் திருச்சி, நாகர்கோவில் மற்றும் சென்னையில் இருக்கின்ற பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த 3 நாட்களுக்கு முன்னர் குறைந்த ஆபத்து உண்டாக்கக்கூடிய நைஜீரியா நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. அதில் அவருக்கு எஸ் ஜின் டிராப் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்திருக்கிறது.
இது புதிய வகை நோய்த்தொற்று பாதிப்பின் தொடக்க நிலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதில் 6 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து ஒரே குடும்பத்தைச் சார்ந்த 7 பேரும் கிண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் நோய்த்தொற்று அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நோய்தொற்று பாதித்த 33 பேரின் சளி மாதிரிகள் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு மத்திய அரசின் அனுமதியை பெற்ற இன்ஸ்ட்ரம் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஏழு பேரின் பரிசோதனை முடிவுகளை விரைந்து அனுப்பி வைக்க அந்த நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. இன்றோ அல்லது நாளையோ பரிசோதனை முடிவுகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் 13 எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களில் எல்லைகளிலும், சாலை வழியாக வருபவர்கள் கண்காணிக்க படுகிறார்கள் என்று அவர் கூறியிருக்கிறார்.