தமிழ் பட தயாரிப்பில் இறங்கும் முன்னாள் கேப்டன் தோனி… வெளியான அறிவிப்பு!

0
130

தமிழ் பட தயாரிப்பில் இறங்கும் முன்னாள் கேப்டன் தோனி… வெளியான அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி சில மாதங்களுக்கு முன்பாக சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.

இந்நிலையில் இப்போது தமிழில் அவரது தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கான கதையை தோனியின் மனைவி சாச்ஷி எழுத ரமேஷ் தமிழ் மணி என்பவர் இயக்க உள்ளார். இந்த படம் இந்தியா முழுவதும் மற்ற மொழிகளிலும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமான அறிவிப்பில் ”இந்திய அளவில் பிரபலமான நட்சத்திர கிரிக்கெட் வீரராக தோனி திகழ்ந்தாலும், அவருக்கும் தமிழக மக்களுக்கும் இடையேயான பந்தம் பிரத்யேகமானது. சிறப்பானது. இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் தோனி என்டர்டெய்ன்மெண்ட், தனது முதல் படத்தை தமிழில் தயாரிக்கிறது. இந்த படம், தோனி என்டர்டெய்ன்மெண்ட்டின் நிர்வாக இயக்குநரான சாக்ஷியின் கருத்தாக்கம் கொண்ட ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாகும். இந்த திரைப்படத்தை ‘அதர்வா- தி ஆர்ஜின்’ எனும் முப்பரிமாண வடிவிலான கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இந்த நாவல் ஒரு புதிய யுக கிராஃபிக் நாவல். மேலும் இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்.

தமிழில் மட்டுமின்றி அறிவியல் புனைவு கதை, குற்றவியல் நாடகம், நகைச்சுவை, சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் பல வகையான அற்புதமான மற்றும் அர்த்தமுள்ள உள்ளடக்கத்தை கொண்ட திரைப்படங்களை உருவாக்கவும் மற்றும் தயாரிப்பதற்காகவும், பல திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்களுடன் தோனி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.” எனத் தெரிவித்துள்ளனர்.