வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு கிடைக்க சபரிமலையில் பக்தர்கள் வேண்டுதல்

0
155

வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு கிடைக்க சபரிமலையில் பக்தர்கள் வேண்டுதல்

கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு தற்போதுள்ள MBC இட ஒதுக்கீட்டு பிரிவில் 10.5 உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது.

இந்நிலையில் இதை எதிர்த்து முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். குறிப்பாக திமுக இந்த விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்தது விமர்சனத்திற்கு உள்ளானது. தென் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று பேசினார்.

அதே நேரத்தில் வட மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த திமுகவினர் வன்னியர்களுக்கு இந்த 10.5 போதுமானது அல்ல.ஏற்கனவே 15 சதவீத இடங்கள் கிடைத்து வருகிறது என்றும் பேசினார்கள். இந்நிலையில் திமுக ஆட்சியமைத்த பிறகு வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இந்த 10.5 இட ஒதுக்கீடு குறித்து தொடரப்பட்ட வழக்கில் போதுமான தரவுகள் இல்லையென்று சட்டம் ரத்து செய்யப்பட்டது.

அப்போதே தமிழக அரசு உரிய தகவல்களை அளிக்கவில்லை என்றும், ஏற்கனவே திமுக தலைவர் தென் மாவட்டங்களில் அளித்த வாக்குறுதியை இப்போது சட்டத்தை நீதி மன்றம் மூலமாக தடை செய்வதன் மூலமாக நிறைவேற்றி விட்டார் என்றும் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் உயர் சாதி ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீடு எந்த தகவல்களின் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பது குறித்தும் விமர்சனம் எழுந்தது.

அந்த வகையில் பாமக மற்றும் பல்வேறு வன்னியர் சமூக அமைப்புகள் மீண்டும் இந்த 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மீண்டும் கிடைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சபரிமலைக்கு சென்ற தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வன்னியர்களுக்கு மீண்டும் 10.5 உள் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டுதல் வைத்துள்ளது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.