வன்னியருக்கு துணை முதல்வர் பதவி! அதிமுகவின் அதிரடி வியூகம்

0
104

வன்னியருக்கு துணை முதல்வர் பதவி! அதிமுகவின் அதிரடி வியூகம்

 

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியமைத்தது.அதிமுக, திமுக என இரு கழகங்களில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற இரு பெரும் தலைவர்களும் மறைந்த நிலையில் இரு கட்சிகளுக்கும் இந்த தேர்தல் கடும் சவாலாகவே அமைந்தது.

ஆட்சியை பிடிக்க வேண்டும் என திமுக தீவிரமாக செயல்பட்டது.பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்,பல்வேறு இலவச வாக்குறுதிகள்,பெரும்பாலான தமிழக ஊடகங்களின் மறைமுக ஆதரவு என திமுக அனைத்து வழிகளிலும் முயற்சித்தது. அதே போல ஆட்சியில் இருந்த அதிமுகவும் தேர்தலுக்காக பல்வேறு வியூகங்களை வகுத்தது. இறுதியில் திமுக வெற்றி பெற்று அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தது.இந்த தோல்வியானது அக்கட்சியினர் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.

 

கடந்த தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு அக்கட்சி அளித்த பல்வேறு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் தான் காரணம் என்றாலும்,மறுபுறம் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜகவின் மீதான தமிழக மக்களின் எதிர்ப்பும் சரியாக வேலை செய்தது.அதே நேரத்தில் தென் மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினர் பலரும் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தது மற்ற சமுதாய மக்களின் எதிர்ப்பை பெற காரணமாகி விட்டது என்றும் கூறி வருகின்றனர்.

 

ஆனால் அந்த இட ஒதுக்கீடு என்பது ஏற்கனவே நீதி மன்றத்தால் உறுதி செய்யபட்டு கிடப்பில் வைக்கப்பட்டது தான் என்பதை அக்கட்சி நிர்வாகிகள் யாரும் மக்களிடம் சரியாக விளக்கவில்லை.அதே போல இந்த இட ஒதுக்கீடு தவிர தமிழக அரசியலில் பெரும்பான்மையாக உள்ள வன்னிய சமுதாய மக்களுக்கு உரிய முக்கியத்துவத்தை இரு கட்சிகளும் கொடுக்கவில்லை எனவும் வன்னிய சமுதாய அமைப்பை சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் முதல்வர் அல்லது துணை முதல்வர் பதவி கொடுத்திருந்தால் அதிமுக ஆட்சியை பிடித்திருக்கும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ள கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜெயலலிதா இருந்த வரையில் அவருக்கு உதவியாளராக இருந்த பூங்குன்றன் அவர் மறைந்த பின்னர் அரசியலிலிருந்து விலகி ஆன்மிகம்,விவசாயம் என கவனம் செலுத்தி வருகிறார்.அதே நேரத்தில் அதிமுக தலைமைக்கும் அவ்வப்போது ஆலோசனைகளை அளித்து தமிழக அரசியலில் ஷாக் கொடுத்து வருகிறார்.

 

இந்நிலையில் வன்னியர் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருந்தால் அதிமுக ஆட்சியை பிடித்திருக்கும் என்று அவருடைய முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது.

 

காலம் எதைத் தீர்மானிக்கிறது என்பதைப் பொறுத்துதான் வெற்றியும், தோல்வியும். அறிவு இருக்கிறது என்பதால் நாம் எதிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைப்பது அனுபவமின்மையையே காட்டும். காலம் நமக்கு துணை இருந்தால் மட்டுமே வெற்றிக் கனியை பறிக்க முடியும்.

 

தேர்தலுக்கு முன்பு எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதிமுக ஆட்சியில் மெஜாரிட்டி சமுதாயமான முக்குலத்தோர், கவுண்டர் சமுதாயத்தினர் முதலமைச்சர் பதவியை அலங்கரித்துவிட்டனர். மற்றொரு பெரிய சமுதாயமான வன்னியர்களுக்கு முதலமைச்சர் பதவி தந்தால் அதிமுக இந்த முறையும் ஆட்சியை பிடித்திருக்குமோ! இட ஒதுக்கீடு அறிவித்ததற்கு பதிலாக துணை முதலமைச்சர் பதவியை வன்னியருக்கு அறிவித்திருந்தால் கழகம் வெற்றி பெற்றிருக்கும் என்பது என் கணிப்பு. வெற்றிக்குப் பிறகு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று சொல்லி இருக்கலாம். மற்ற சூழல்களையும், முக்கிய நிர்வாகிகளையும் கணக்கிட்டுத்தான் இந்த யோசனை எனக்குத் தோன்றியது. நண்பர்களிடம் இது பற்றி விவாதித்தேன். அற்புதமான யோசனை என்றார்கள். பதிவு செய்ய நினைக்கும் போது தேர்தல் அறிவிக்கபட்டுவிட்டதால் இது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தவிர்த்துவிட்டேன். காலம் நம் பக்கம் இல்லை என்பதை மனம் அப்போதே எனக்கு உணர்த்தியது.

 

காலம் நமக்கு கை கொடுக்க வேண்டும். காலத்தின் கருவி தான் நாமே தவிர நமக்கு காலம் கருவி கிடையாது. காலம் நமக்கு வழிவிடும் போது வாய்ப்புகளை நழுவவிட்டுவிட்டு பின்னர் புலம்பித் திரிவதில் எந்த பிரயோஜனமில்லை. முடிவுகளை எடுக்கும் நேரத்தில் சரியாக எடுக்க வேண்டும். இல்லாவிட்டால்…

 

ஆளுமை கொண்ட தலைவர் ஒருவராக இருந்தால் சாதிகளுக்கு முக்கியத்துவம் குறைந்துவிடும், கழகம் பழைய நிலைக்கு திரும்பிவிடும் என்பது என் நிலைப்பாடு என்று அவர் அந்த பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த அடிப்படையில் அதிமுகவில் செல்வாக்கு மிக்க தலைவர்களாக உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மற்றும் கே.பி.முனுசாமி உள்ளிட்ட யாரோ ஒருவருக்கு துணை முதல்வர் பதவி அளித்து அடுத்த தேர்தலை சந்திக்கவும் வாய்ப்பு உள்ளதாகவே எதிர்பார்க்கப்படுகிறது.