அடுத்த 12 மணி நேரத்தில் தமிழகத்தின் இந்த பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
66

தமிழ்நாட்டின் கடந்த சில வார காலமாக கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபட்டு காணப்படுவதன் காரணமாக, ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இதன் ஒரு கட்டமாக நேற்று முன்தினம் மேற்கு வங்க கடல் பகுதியில் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டி இருக்கக்கூடிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டது.

இந்தத் தாழ்வு பகுதியானது தாழ்வு மண்டலமாக வலுவடைந்து தென்மேற்கு வங்க கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டி இருக்கக்கூடிய இந்தியப்பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இந்த தாழ்வு மண்டலம் இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைவதற்கான வாய்ப்பிருக்கிறது என்றும் அதன் பிறகு அது இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நாளையதினம் நகர்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த சூழ்நிலையில், சென்னைக்கு தென்கிழக்கிலுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பிருக்கிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

அதோடு அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழக கடற்கரை பகுதியை நோக்கி இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நகரக் கூடும் என்றும் தெரிவித்திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் கன மழையும், ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்றும், வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.