தமிழக சட்டசபையின் சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வானார்!

0
76

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் இணைந்து அவருடைய அமைச்சரவை சகாக்கள் 34 பேர் பதவி ஏற்றுக் கொண்டார்கள்.

அதிமுக கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 76 இடங்களில் வெற்றியடைந்து பலமான எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைந்திருக்கிறது. இந்நிலையில் அதிமுகவில் அடுத்தது எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற குழப்பம் நிலவி வந்தது. இந்த குழப்பத்திற்கு நேற்றைய தினம் நடந்த அந்த கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்வு கிடைத்தது.அதாவது அந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு சுமார் 60 சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், இன்று தொடங்கிய தமிழகத்தின் 16வது சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக சட்டசபையின் சபாநாயகராக ராதாபுரம் திமுக சட்டசபை உறுப்பினர் அப்பாவு தேர்வாகி இருக்கிறார். அதேபோல துணை சபாநாயகராக போட்டியிடுவதாக வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை அதனால் துணை சபாநாயகராக பிச்சாண்டி தேர்வாகி இருக்கிறார்.இதற்கு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 12 மணியுடன் முடிவடைந்த நிலையில் வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் நாளை முறைப்படி பதவியேற்க இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.