தளர்வுகளை தவறாக பயன்படுத்தாதீங்க! இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை! உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

0
83
Chennai High Court
Chennai High Court

கொரோனா ஊரடங்கு தளர்வுகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்த வேண்டாம், இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், தளர்வுகள் நடைமுறைக்கு வந்த மூன்று நாட்களும் சாலைகளில் ஏராளமான ஊர்திகள் நிரம்பி வழிந்தன.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிக்னல்களை மீண்டும் காவல்துறையினர் இயக்க ஆரம்பித்து விட்டனர். வழக்கமான நிலைக்கு பெரும்பாலான இடங்கள் சென்றுவிட்டதையே இது காட்டுகிறது. இந்நிலையில், தெரு விலங்குகளுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர் சிவா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தெரு விலங்குகளை பாதுகாக்க உரிய நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள. ஆனால் ஊரடங்கை விலக்கிக் கொண்டது போன்று பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இது கொண்டாட்டங்களுக்கான நேரம் கிடையாது என்ற நீதிபதிகள், தேவையின்றி வெளியே வருவோரை தடுப்பதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினர். அப்போது, முதல் அலையில் காவல்துறை கடுமையாக நடந்து கொண்டதால் பல பிரச்சனைகள் வந்ததாகவும், அதனால், தற்போது பொதுமக்களின் சிரமங்களை போக்குவதற்காகத்தான் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மக்கள் வேளியே வருவதைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை என்றனர். இதையடுத்து விசாரணையை 14ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அப்போது, தமிழக அரசு எடுத்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.