கனிம வளங்களை சுரண்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது! உயர்நீதிமன்றம் அதிரடி!

0
74

திருச்சி டால்மியா புரத்தில் இருக்கும் டால்மியா லிமிடெட் நிறுவனம் தங்களுடைய நிறுவனத்திற்கு பெரம்பலூர் மாவட்டம் பேரணி கிராமத்தில் இருந்து கனிமங்களை எடுத்து செல்ல வாகன அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, தமிழக அரசு சார்பாக ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் கனிம வளங்களை எடுத்துச் செல்வதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது, மனுதாரரின் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி பெறாததன் காரணமாக, அனுமதி தொடர்பாக பரிசீலனை செய்ய முடியாத நிலையில் மாநில அரசு இருக்கிறது என்று தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பல பகுதிகளில் முறையான விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கனிமவளங்கள் எடுக்கப்படுகின்றது, கனிமவள அனுமதி குறித்து பல வழக்குகள் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சூழ்நிலையில், பல வருடங்களாக நிலுவையில் உள்ளதால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அரசுக்கு வருவாய் இழப்பை உண்டாக்கி வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

கனிம வளங்கள் மூலமாக மிகப்பெரிய அளவில் அரசுக்கு வருவாய் கிடைக்கின்றது ஆகவே கனிமவளம் குறித்த வழக்குகளில் பெறப்பட்டுள்ள இடைக்கால உத்தரவை நீக்க கோரி மனு தாக்கல் செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மனுக்களை நீதிமன்றங்கள் விரைவாக விசாரணை செய்து முடித்து வைக்கவேண்டும். வருவாய் மற்றும் நாட்டின் நலன் சார்ந்து உள்ள இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றமும் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, கனிமவளத்துறை, குறித்த பல்வேறு வழக்குகளில் இடைக்கால உத்தரவை பெற்று பல நிறுவனங்கள் நாட்டின் சொத்துக்களை அபகரித்து வருகின்றன. இது சட்டவிரோதம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது,

தேசத்தின் சொத்துக்களை சுரண்டுவதற்கு யாரையும் அனுமதிக்க இயலாது, அனுமதிக்கவும் கூடாது. கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் சட்டவிரோத செயல்களை மிகக் கடுமையான முறையில் நாம் அணுக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் போன்ற வழக்குகளில் வழக்கு ஆவணங்கள் அடங்கிய கட்டுகள் காணாமல் போயிருப்பதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதனால் பல வழக்குகள் பட்டியலிடப்படுகின்றன. இதுபோன்ற வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிட உயர்நீதிமன்ற பதிவாளர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு ஆவணங்கள் காணாமல் அது வழக்கு ஆவணங்களை வேண்டுமென்றே வேறு பகுதிகளில் மாற்றி வைப்பது உள்ளிட்டவைகளுக்கு பொறுப்பானவர்கள் மீது உயர்நீதிமன்ற பதிவாளர் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.

மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும், பெரிய அளவில் வருவாயை ஈட்டிக் கொடுக்கும் கனிமவளத்துறை குறித்த வழக்குகளை தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த வழக்குகளை மிக விரைவாக முடிக்க தேவைப்பட்டால் சிறப்பு அமர்வு அமைக்கப்படலாம் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருக்கிறது.