சசிகலாவுக்கு ஷாக் கொடுத்த சென்னை உரிமையியல் நீதிமன்றம்! வழங்கிய அதிரடி தீர்ப்பு!

0
130

ஜெயலலிதா மரணமடைந்ததிலிருந்து அதிமுக யாருக்கு சொந்தம் என்ற போட்டி சசிகலா மற்றும் இபிஎஸ், ஓபிஎஸ், உள்ளிட்டோரி டையே நடைபெற்று வருகிறது.எப்படியாவது அதிமுகவை கைப்பற்றி விட வேண்டும் என சசிகலா மிக தீவிரமாக முயற்சித்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக அவர் தொடர்ந்து தொண்டர்களிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு உரையாற்றி வந்தார்.

அதாவது தனக்கு அதிமுகவின் தொண்டர்களின் ஆதரவு இருக்கிறது ஆகவே தான்தான் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட வேண்டும் என பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோருக்கு எடுத்துக் காட்டுவதற்காகவே அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் என்று சொல்லப்பட்டது.

இதற்கிடையே கடந்த 2017ஆம் வருடம் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மூலமாக அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது.

இதில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர். அதற்கு முன்பாக சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017ஆம் வருடம் சசிகலா கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கையுடன் அதிமுகவை நிர்வகிக்க அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

இதற்கான கடிதங்களை தலைமை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தனர் அதிமுகவின் தலைமையை சார்ந்தவர்கள். தேர்தல் ஆணையமும் அவர்களுடைய தேர்வை ஏற்றுக்கொண்டாகிவிட்டது.

இதனை எதிர்க்கும் விதமாக சசிகலா சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அதே வருடம் நவம்பர் மாதம் 1ஆம் தேதி வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் மதுசூதனன், பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்டோர் கூட்டிய பொதுக்குழு செல்லாது எனவும், அது சட்டத்திற்கு புறம்பானது எனவும், தெரிவித்திருந்தார் சசிகலா.

மேலும் பொதுச் செயலாளராகிய நான் பொதுக்குழுவை கூட்ட முடியும் பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் புதிய பதவிகளை ஏற்படுத்தியது சட்டவிரோதமான செயல் என்று குறிப்பிட்டிருந்தார். ஆகவே அவ்விருவரும் கூட்டிய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் சசிகலா.

சசிகலாவின் மனுவிற்கு பதில் வழங்கும் விதத்தில் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, செம்மலை, உள்ளிட்ட 3 பேரும் பதில் மனு தாக்கல் செய்தார்கள். அந்த பதில் மனுவில், அதிமுக இணைந்ததால், தேர்தல் ஆணையத்தில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருக்கிறது.

எங்களுடைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்திருக்கிறது. ஆகவே சசிகலா தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்கள்.

இதற்கு சசிகலாவின் தரப்பில் மறுபடியும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில் அதிமுகவின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் உயிரிழந்துவிட்டார். டிடிவி தினகரன் அதிமுகவிலிருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்து விட்டார் என்று குறிப்பிட்டிருந்தார் சசிகலா.

இப்படியான நிலையில், இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்து விட்டது. சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் நீதிபதி விடுப்பில் சென்றிருந்ததால் இந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

ஆகவே இன்றைய தினம் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்றும், அதோடு அவருடைய வழக்கை தள்ளுபடி செய்வதாகவும், நீதிபதி தெரிவித்துள்ளார்.

இது சசிகலா தரப்பை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது மேலும் இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையை சசிகலா முன்னெடுப்பாரென்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.