சுகாதார செயலாளரை மாற்றியதோடு அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும்! ஸ்டாலின் வலியுறுத்தல்

0
95

சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் பணிமாற்றம் செய்தது போலவே, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சுகாதாரத்துறை செயலாளராக பீலா ராஜேஷ் பணி மாற்றம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. இந்நிலையில் கொரோனா குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் சென்னை மாநகராட்சி இறப்பு கணக்கிற்கும், சுகாதாரத்துறை வெளியிட்ட இறப்பு கணக்கிற்கும் வேறுபாடு இருப்பதாக செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டது.

சென்னை பகுதியில் மட்டும் 400 -க்கும் மேற்பட்ட இறப்புகள் மறைக்கப்பட்ட காரணத்தால், சுகாதாரத்துறை இணை இயக்குனர் மகேந்திரன் தலைமையில் 11 பேர் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து முரண்பாடான அறிவிப்புகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுசம்பந்தமாக அவர் கூறியதாவது; சுகாதாரத்துறை அமைச்சர்களுக்கு இடையே குழு மனப்பான்மை போட்டியால் இந்த குழப்பங்களா? எடப்பாடிக்கு மேலே சூப்பர் முதல்வர்கள் கைகளில் நிர்வாகம் இருக்கிறதா? இந்த அரசியல் அதிகார போட்டியில் கொரோனா காலத்தில் மக்களை பலிகடா ஆக்குவதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுகாதாரத்துறை மூலம் எதுவும் மறைக்கப்படாமல் சரியான தகவல்களை வெளியிட வேண்டும். மருத்துவ பரிசோதனை எண்ணிக்கையை உயர்த்தி நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அவ்வப்போது எத்தனை பரிசோதனை முடிவுகள், நோயாளிகள் மற்றும் இறப்பு குறித்த சரியான தகவல்களை மறைக்காமல் வெளியிட வேண்டும் என கூறினார். மேலும் சுகாதாரத்துறை செயலாளரை மாற்றியதை போல், பல குற்றச்சாட்டிற்கு ஆளான அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என கூறினார்.

இந்த இக்கட்டான சூழலில் முறையான ஒருங்கிணைப்பை உறுதி செய்ய சுகாதாரத்துறையை முதல்வர் தன்வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறும் கருத்தை அலட்சியப்படுத்த வேண்டாம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

author avatar
Jayachandiran