திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் மூடல்; மாவட்ட ஆட்சியர் துரிதமான நடவடிக்கை

0
105

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் நோய் பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அனைத்து அலுவலகங்களிலும் கிருமிநாசினி தெளித்து தூய்மைபடுத்துமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கூறியிருந்தார். அவரது உத்தரவின் படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் உட்பட அனைத்து அலுவலகங்களிலும் கிருமி நாசினி முன்னெச்சரிக்கையாக தெளிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஒரு நாள் மட்டும் மேலும் மூடப்படுவதாகவும், பணியாளர்கள் யாரும் வரவேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நேற்று கிருமிநாசினி தெளித்த காரணத்தால் இன்றும் அலுவலகம் மூடுவதாக அவர் தெரிவித்தார். இவரது முன்னெச்சரிக்கை நடவடிக்கை நோய் பரவலில் இருந்து பாதுகாப்பு கிடைக்கச் செய்யும் வழியாக பார்க்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பன்மடங்கு உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

author avatar
Jayachandiran