15 நாட்களுக்கு ஒரு முறை இதை செய்ய வேண்டும்! திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!

0
74

தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சென்ற செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மிக நீண்ட தினங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பதால் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை தருகிறார்கள். இருந்தாலும் பள்ளி திறக்கப்பட்ட அன்றிலிருந்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நோய் தொற்று உறுதி ஆவது அதிகரித்து வருகின்றது. இந்த செயல் மீண்டும் பள்ளிகளை மூடுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை தமிழக அரசு மற்றும் ஆசிரியர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இருந்தாலும் பள்ளிகள் இருந்ததால்தான் மாணவர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது தவறான விஷயம் முன்னரே தொற்று இருப்பவர்கள் பள்ளிக்கு வந்தவுடன் அது கண்டறியப்பட்டு இருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் சமீபத்தில் கூறியிருந்தார்.இந்த சூழ்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் 15 தினங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டு விடாதவாறு மாவட்ட நிர்வாகத்தால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கண்டிப்பாக தங்களுடைய பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட எல்லோருக்கும் 15 தினங்களுக்கு ஒரு முறை அருகில் இருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதன் முடிவுகளை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு வருகை தரும் எல்லா மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் நோய் தொற்று பரிசோதனை செய்வதற்கு போதுமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த பணியினை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் தவறாமல் கண்காணித்து ஒவ்வொரு 15 நாட்களுக்கும் தவறாமல் முதன்மை கல்வி அலுவலர் மூலமாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை செய்வதற்காக முன்பே நியமனம் செய்யப்பட்டு இருக்கின்ற பொறுப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்ற பள்ளிகளுக்கு சென்று கண்காணித்து இதுதொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.