அதிமுகவின் தகுதி முறையை விமர்சனம் செய்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் இன்று அதே முறையை பின்பற்றுகிறார்; எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

0
56

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வுக்கு வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதி ஆகும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் இணையதளம் மூலமாக மனு ஒன்றை வழங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அளித்த இந்த மனுவில் 2013ஆம் வருடம் முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வாய்ப்பு பெறாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது.

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னொரு நியமன தேர்வு நடத்தி பணி வழங்க அரசாணை அன்றைய அதிமுக அரசால் வெளியிடப்பட்டு இன்று வரையில் அது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த அரசாணையை அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், இன்றைய முதலமைச்சருமான ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டார்.

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்கள் ஆகவே முதலமைச்சர் தெரிவித்ததை போல சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்கப்படுமா? அல்லது நியமன தேர்வு அடிப்படையில் பணி வழங்கப்படுமா? என்பதை தெளிவாக தெரிவிக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நியமன தேர்வு மூலமாக பணி வழங்கும் பட்சத்தில் தேர்வுக்கான பாடத் திட்டத்தை மிக விரைவாக வெளியிட்டால் பத்து வருடங்களாக இதை நம்பியே வாழ்க்கையை தொலைத்த எங்களுக்கு தேர்வுக்கு முயற்சிக்கும்போது அதிகபட்ச நேரம் கிடைக்கும் என்று கூறினார்.

இதற்கு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் பள்ளி கல்வித்துறை அளித்திருக்கின்ற பதிலில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக நேரடியாக பணி நியமனம் செய்யப்படும் என்ற கோரிக்கையை நாங்கள் நிராகரிக்கின்றோம். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வுக்கு வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதி ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி அரசாணை எண் 149 இன் அடிப்படையில் போட்டித்தேர்வு மூலமாக தேர்வுப் பணி முன்னெடுக்கப்படும். இந்த தேர்வு தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடும்போது பார்வையிட்டு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அதிமுக அரசு இதே முறையைத்தான் கடைபிடித்தது. ஆனால் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் அதனைக் கடுமையாக எதிர்த்து விட்டு தற்போது தான் ஆட்சியில் இருக்கும் போது மட்டும் அதிமுக கொண்டு வந்த அதே முறையை பின்பற்றி இருக்கிறார் என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.