புதுக்கோட்டையில் ஆய்வை தொடங்கவிருக்கும் முதல்வர்…! சுறுசுறுப்பான அதிகாரிகள்…!

0
57

விராலிமலையில் ஜல்லிக்கட்டு நினைவு சின்னத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாளை திறந்து வைக்க இருக்கிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் சமீபத்தில் மறைந்த காரணத்தால் முதல்வரின் கன்னியாகுமரி உள்பட ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தடுப்பு ஆய்வு பணியானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கை சம்பந்தமாக முதல்வர் நாளை அங்கே ஆய்வு செய்யவிருக்கிறார். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஜல்லிக்கட்டின் நினைவுச் சின்னத்தை அவர் திறந்து வைக்கவிருக்கிறார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு ஒரு மாபெரும் புரட்சியை செய்து உள்ளது என்றுதான் சொல்லவேண்டும். தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு தமிழர்களின் பாரம்பரியமான இந்த விளையாட்டை மீட்டுக் கொடுத்து இருக்கிறார்கள். அதனைப் பறைசாற்றும் விதமாக இந்த நினைவுச்சின்னம் இருக்குமென தெரிகிறது.

அதே போல தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்திருக்கிறது. இருந்தாலும், இப்போது தீபாவளி நவராத்திரி தசரா என்று பண்டிகை காலம் நெருங்கி வந்து கொண்டே இருப்பதால் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக அதுபற்றி அந்த மாவட்டத்தின் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.