உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பணியிடமாற்றம்! போராட்டத்தில் குதித்த வழக்கறிஞர்கள்!

0
87

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கின்ற சஞ்சீப் பேனர்ஜி அவர்களின் பணி இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று உயர் நீதிமன்ற வாயிலில் வழக்கறிஞர்கள் சார்பாக அமைதிப் போராட்டம் நடைபெற இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கக்கூடிய சஞ்சீவ் பானர்ஜி அவர்களை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.

உச்சநீதிமன்ற கோலிஜியம் குழுவின் பரிந்துரையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்து ஏற்கனவே சென்னையில் இருக்கக்கூடிய 237 வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியிருந்தார்கள் இந்த நிலையில், இதே கோரிக்கையை முன்னிறுத்தி மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் தத்தார், பிஎஸ் ராமன், அரவிந்த் பாண்டியன், நளினி சிதம்பரம் என் ஆர் இளங்கோ கபீர் வி பிரகாஷ் போன்ற 31 மூத்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

இதில் தெரிவித்திருப்பதாவது, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி பதவியேற்றார். 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி அவர் ஓய்வு பெறும் தேதியுடன் அவருக்கு இன்னும் 2 வருடங்கள் பணி காலம் இருக்கின்ற போதிலும் பதவியேற்ற 10 மாதங்களிலேயே பணி இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது அந்த கடிதத்தில்
.

அவர் தன்னுடைய பதவி காலத்தில் நிர்வாகம் மற்றும் நீதி துறை உள்ளிட்ட இரண்டிலும் தன்னுடைய செயல்பாடுகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றார். அவர் வகித்த பதவிக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் செயல்பட்டார். நோய்தொற்று காலத்திலும் சில ஆயிரம் வழக்குகளை விசாரணை செய்து முடித்து வைத்திருக்கின்றார்.

இப்படியான சூழ்நிலையில்,, திடீரென்று அவர் வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதற்கான காரணம் என்ன? என்று எங்களால் புரிந்துகொள்ள இயலவில்லை. ஒரு மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் இது போன்ற குறுகிய பதவிக்காலம் நீதி வழங்கும் அமைப்பின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய செயலாகும்.

ஒரு புதிய தலைமை நீதிபதி ஒரு நிறுவனத்தின் நிர்வாகம், அமைப்பு மற்றும் கலாச்சாரம் மொழி மற்றும் உள்ளூர் நடைமுறைகளை புரிந்துகொள்ள குறைந்தபட்சம் ஒரு வருடமாவது ஆகும் அப்படி இருக்கும் சமயத்தில் பதவியேற்ற 10 மாதங்களிலேயே பணி இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது என கூறியிருக்கிறார்கள் மூத்த வழக்கறிஞர்கள்.

நீதிபதியின் இடமாற்றம் என்பது பொது நலன் மற்றும் நீதித்துறை நிர்வாக நலன் கருதி மட்டுமே இருக்க வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கின்ற சூழ்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பணியிட மாற்றம் எதனை அடிப்படையாக கொண்டு நடைபெறுகின்றது என்பது தெரியவில்லை.

பெரிய உயர்நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகளை கையாளும் திறனையும், திறமையும், கொண்ட அனுபவசாலியான தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றம் போன்ற சிறிய நீதிமன்றங்களை விடவும், சென்னை உயர்நீதிமன்றம் போன்ற பெரிய நீதிமன்ற வழக்குகளுக்கு அவருடைய தேவைகள் அதிகமாக இருக்கிறது என சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

ஆகவே தலைமை நீதிபதியின் பணியிட மாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் இதனை கொலிஜியம் பிரதிநிதித்துவத்தை எதிர்க்கும் செயலாக பார்க்க வேண்டாம், நீதி அமைப்பின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதற்கான வேண்டுகோளாக இதனை நாங்கள் முன்வைக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

அதோடு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், இன்று உயர் நீதிமன்ற வாயிலில் வழக்கறிஞர்கள் அமைதிப் போராட்டம் நடத்தவும் முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.