ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! டெல்லியை துவம்சம் செய்த சென்னை அணி!

0
91

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, சென்ற மாதம் தொடங்கிய இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்த நிலையில், நேற்று 2வதாக நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நேருக்கு, நேர், சந்தித்தனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனடிப்படையில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக டெவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், உள்ளிட்ட இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில் இருவரும் பவர்ப்பிலேவை பயன்படுத்தி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

டெல்லி அணியின் பந்து வீச்சாளர்களை சிதறடித்த இந்த ஜோடி சிக்சர், பவுண்டரிகளாக பறக்க விட்டது. கடந்த 2 போட்டிகளிலும் அரைசதமடித்திருந்த காண்வே இந்தப் போட்டியிலும் அரைசதம் கண்டார்.

28 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் அவர் அரைசதம் கண்டார் இதனால் சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட்டிழப்பின்றி 100 ரன்களை கடந்தது.

மிகச் சிறப்பாக விளையாடி வந்த ருதுராஜ் 47 ரன்களில் ஆட்டமிழந்தார், இவரைத் தொடர்ந்து துபே களம்புகுந்தார். 49 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்த நிலையில் டெவன் கான்வே, கலீல் அஹ்மத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடு களம்புகுந்தார் துபே 32 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி களமிறங்கினார் தன்னுடைய பங்கிற்கு சிக்ஸர் அடித்தார் 8 பந்துகளில் 21 ரன்களை சேர்த்தார்.

கடைசியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டிழப்பிற்கு 208 ரன்களை சேர்த்தது. 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

மிகப்பெரிய இலக்கு என்பதால் தொடக்கம் முதலே அதிரடி காட்ட வேண்டிய சூழ்நிலையில், டெல்லி அணி இருந்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியின் வீரர்கள் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னர் 10 ரன்னிலும், பரத் 12 ரன்னிலும், ஆட்டமிழந்தனர். அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட மிட்செல் மார்ஷ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 20 ரன்களில் போல்டாகி வெளியேறினார். அடுத்ததாக வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பத் தொடங்கினர்.

கடைசியில் டெல்லி அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களுக்கு சுருண்டது. இதனால் சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நடப்பு தொடரில் சென்னை அணி பெறும் 4வது வெற்றி இது என சொல்லப்படுகிறது. இந்த வெற்றியின் மூலமாக சென்னை அணி புள்ளி பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது.