அசானி புயல் எதிரொலி! 18 மாவட்டங்களில் அடுத்த 3மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை!

0
86

தமிழகத்தில் பங்குனி மாதம் முதலே கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் விவசாயிகள், கூலி வேலை செய்பவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்.

இதற்கிடையே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மாநில சுகாதாரத் துறையும் ஒரு சில அறிவுரைகளை வழங்கியது. அதாவது காலை, 9 மணி முதல் மதியம் 3 மணி வரையில் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். தாகம் எடுக்கிறதோ, இல்லையோ, 1 மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் அருந்த வேண்டும். உள்ளிட்ட பல அறிவுரைகளை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டிருந்தது.

அதோடு சித்திரை மாதம் தொடங்கியவுடன் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் ஆரம்பமானது. இதனால் வெயில் மேலும் கொளுத்த தொடங்கியது.

இந்த நிலையில், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8ஆம் தேதி புயலாக மாறியது, இதற்கு அசானி என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த புயல் ஒடிசா, ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களில் மிரட்டிக் கொண்டிருக்கிறது. இந்த புயல் சின்னம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 17 உள்நாட்டு விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. அதோடு சென்னையிலிருந்து அந்தமானுக்கு விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், இந்த புயல் காரணமாக, உண்டாகியிருக்கின்ற காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுவையில் மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதனடிப்படையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, உள்ளிட்ட மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.