ஆன்லைன் கல்வி – சைபர் பாதுகாப்பு கையேட்டை வெளியிட்ட CBSE (டவுன்லோட் லிங்க் உள்ளே)

0
69

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதால், பள்ளிகள் திறப்பதை மத்திய மாநில அரசுகளை தள்ளி வைத்துள்ளன.

பெரும்பாலும் ஜூன் முதல் வாரத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நடப்பு கல்வியாண்டு துவங்கிவிடும் என்பதால், மாணவர்களின் நேரம் வீணாவதைத் தடுக்கு ஆன்லைன் எனப்படும் இணையதளத்தின் மூலம் கல்வி கற்பிக்கும் முறையை அரசு பரிந்துரையின் பெயரில் பெரும்பாலான பள்ளிகள் தற்போதே துவக்கி விட்டன.

இந்நிலையில் இணைய தளத்தை கையாளும் மாணவர்கள் தங்கள் பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மாணவர்களுக்கான சைபர் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த கையேட்டைப் பள்ளிகளுக்கு CBSE வெளியிட்டுள்ளது.

இதில், 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான பல்வேறு வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், இணையதளம் நட்பின்போது செய்யக் கூடியவை, செய்யக்கூடாத நடவடிக்கைகள் என்னென்ன, அதனால் ஏற்படும் பின் விளைவுகள் என்ன என்பது குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

பதின் பருவத்தினர் எனப்படும் டீன்ஏஜ் மாணவ, மாணவிகள், இனக்கவர்ச்சி தூண்டலால் சிலருடன் உறவில் ஈடுபடுகின்றனர். அந்த உறவிலிருந்து வெளியேறும்போது தங்களின் நட்புகளால் பழி வாங்கப்படுகின்றனர்.

இதனால், அவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஆபாசமாக வெளியிட்டு பழி வாங்குகின்றனர். இவை குறித்து மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பதின்வயது சிறுமியை அவள் மீது பொறாமை கொண்ட வகுப்பு மாணவர்கள், முன்னாள் காதலன் அல்லது சமூக வலைத்தளங்களில் யார் என்று அறியப்படாத ஒரு நண்பனால் கூட பழிவாங்கலாம்..

இணையத்தினால் வரும் அபாயங்களை உணர்ந்து, அந்த தொடர்பிலிருந்து விலகும் போதும் இதே பிரச்னைகளை சம்பந்தப்பட்டவர் எதிர்கொள்ளக் கூடும் என்பதால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து CBSEவாரிய மூத்த அதிகாரி கூறுகையில், “மாணவர்கள் தங்களின் ஆன்லைன் நண்பர்கள், நிஜ வாழ்க்கை நண்பர்களுடனான ஆன்லைன் தகவல் தொடர்புக்கும் வரம்புகளை நிர்ணயித்துக் கொள்வது அவசியம். ஆன்லைன் மூலம் அனுப்பப்படும் புகைப்படங்கள், காணொளிகள், உரையாடல்களை பகிர்வதற்கும் வரம்பு இருக்க வேண்டும். இந்த தகவல்களை இவர் மட்டும்தான் பார்க்க வேண்டும், படிக்க வேண்டும் என்று நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக, பழிவாங்கும் ஆபாச வலையில் மாணவர்கள் விழாமல் கவனமாக இருக்க வேண்டும். 14 முதல் 18 வயதுக்குட்பட்ட பதின் பருவத்தினர் பழிவாங்கும் ஆபாச நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த கையேட்டை கீழே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://cbseacademic.nic.in/web_material/Manuals/Cyber_Safety_Manual.pdf

author avatar
Parthipan K