தமிழகத்தில் போலி மதுவால் ஏற்படும் உயிரிழப்புகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி பேட்டி!!

0
119
#image_title

தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும்,படித்தவரும் பொருளாதார நிபுணருமான பி.டி.ஆர் பேசிய ஆடியோவில் உண்மை தன்மை இருப்பதால் தான் அவர் டம்மியான துறைக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கள்ளச்சாராய மரணங்கள், தமிழக அமைச்சர்களின் ஊழல் முறைகேடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆளிநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி தலமையில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் ஹுசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், பெஞ்சமின், உள்ளிட்டோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, இரண்டாண்டு ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளத்காகவும், பல்வேறு துறைகளில் நடைப்பெற்ற ஊழல் தொடர்பாக புகார் அளித்ததாக கூறினார்.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்தும் , அரசு விழிப்புடன் இல்லாத காரணத்தால் நேற்று தஞ்சையில் இருவர் பலியாகி உள்ளனர். பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் போலி மதுபானங்கள் விற்கப்படுகிறது. 75% டாஸ்மாக் பார்கள் சட்ட விரோதமாக செயல்படுகிறது. இந்த பார்கள் மூலமாக வரும் வருவாய் அனைத்தும் மேலிடத்துக்கு செல்வதாக சூசகமாக விமர்சித்தார்.

போலி மதுபானத்தால் இறந்ததாக செய்தி வரக்கூடாது என்பதால் , சையனைட் கலந்து குடித்ததாக அரசு அதிகாரிகள் கொண்டு தவறான தகவல் தெரிவிப்பதாகவும், இருவரின் உடலையும் புதுச்சேரி ஜிப்மரில் வைத்து உடற்கூராய்வு செய்ய வேண்டும். அப்போது தான் உண்மை வெளி வரும் என வலியுறுத்தினார்.

கள்ளச்சாராய மரணங்கள் நடந்ததும், அடுத்த நாளே 2000 பேர் கைது செய்யப்படுகிறார்கள் என்றால், அரசுக்கும், காவல்துறைக்கும் முன்கூட்டியே தெரிந்துள்ளது என குற்றம்சாட்டிய அவர், காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் கடந்த 13 ஆண்டுகளாக கள்ளச்சாராய மரணமே இல்லை என தெரிவித்துவிட்டு இப்போது அதிமுக ஆட்சியிலும் கள்ளச்சாராய மரணம் நடந்ததாக அமைச்சர்கள் தவறான தகவல்கள் தெரிவிப்பதாக கூறினார்.

தமிழகத்தில் காவல்துறை மீது இருந்த பயம் போய்விட்டது. இப்போது நவீன முறையில் டெக்னிக்கலாக காரில் சென்று செயின் பறிப்பு செய்யும் நிலை வந்துவிட்டது. இது குறித்தும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் ஜி ஸ்கொயர் நிறுவனங்கள் குறித்து புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் 30 ஆயிரம் கோடி சம்பாதித்ததாக பி.டி.ஆர் பேசிய ஆடியோ விவகாரத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய அவர், பழனிவேல் தியாகராஜன் மனசாட்சி படி நடந்துக்கொண்டதாகவும், அவர் மெத்தப்படித்தவர் பொருளாதார நிபுணர், அவர் பேசிய ஆடியோவில் உண்மை தன்மை இருப்பதால் தான் அவர் டம்மியான துறைக்கு தூக்கியடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

author avatar
Savitha