அம்பேத்கர் சிலை உடைப்பு போராட்டத்தில் கலவரத்தை தடுக்க விடுதலை சிறுத்தைகள் மீது வழக்கு!

0
109
Case filed against VCK Party in Ambedkar Statue Issue-News4 Tamil Online Tamil News Channel
Case filed against VCK Party in Ambedkar Statue Issue-News4 Tamil Online Tamil News Channel

அம்பேத்கர் சிலை உடைப்பு போராட்டத்தில் கலவரத்தை தடுக்க விடுதலை சிறுத்தைகள் மீது வழக்கு!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு சிதைக்கப்பட்ட நிலையில் மறுநாளே அந்த இடத்தில் புதிய அம்பேத்கர் சிலையை நிறுவியுள்ளது தமிழக அரசு. அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுகளைப் பெற்ற நிலையில் அம்பேத்கர் சிலைத் தகர்ப்பை ஒட்டி தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்களை தமிழக அரசு கையாண்டுள்ள விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் லண்டனில் இருக்கும் நிலையில் அவர் வெளியிட்ட அறிக்கையில், “நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை இடித்துத் தகர்க்கப்பட்ட இடத்தில் இரவோடு இரவாக புதிய சிலை ஒன்றைத் தமிழக அரசு நிறுவியிருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கைக்கு ஏற்ப சிலையை நிறுவிய தமிழக அரசுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூகப் பதற்றத்தைத் தணிக்கும் விதமாக தமிழக அரசு விரைந்து எடுத்துள்ள இந்த நடவடிக்கையைப் பாராட்டுகிறோம், நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதுபோலவே இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட சாதி பயங்கரவாதிகளை ஒடுக்குவதிலும் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இதுவே ஒரு மோசமான முன்னுதாரணமாக ஆகிவிடும். எனவே, இதில் எவ்வித சமரசமும் கூடாது எனத் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், அவரது உத்தரவின் பேரில் ஆகஸ்ட் 26ஆம் தேதி அம்பேத்கர் சிலையைத் தீர்ப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் சிறுத்தைகள் கட்சியினர் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 20 இடங்கள் முதல் அதிகபட்சம் 40 இடங்கள் வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர். அக்கட்சியின் வலிமைக்கேற்ப 30 பேர் முதல் 100-க்கும் மேற்பட்டோர் வரை சாலை மறியல் போராட்டங்களில் கலந்து கொண்டனர்.

மறியல் செய்தவர்கள் மீது வழக்கமான நடவடிக்கை எடுத்து முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவர் மீதும் முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு காவல் துறை மேலிடம் நேற்று மாலை உத்தரவிட்டது.

பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், கூட்டமாகக் கூடி சதித் திட்டம் தீட்டுதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அத்தனை பேர் மீதும் சில நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை பதிவு செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையின் இந்த நடைமுறை வித்தியாசமானதாகவும் விபரீதமானதாகவும் விடுதலைச் சிறுத்தைகளால் பார்க்கப்படுகிறது.

“தகர்க்கப்பட்ட சிலைக்குப் பதில் புதிய அம்பேத்கர் சிலையை தமிழக அரசு நிறுவியது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் கடுமையான எதிர்ப்பை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது. அதை சமாளிக்க விடுதலைச் சிறுத்தைகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. சாலை மறியலில் ஈடுபட்ட சிறுத்தைத் தொண்டர்கள் ஒவ்வொருவர் மீதும் குற்றப்பத்திரிகை பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி அலைக்கழிப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. ஜனநாயக ரீதியான போராட்டங்களை இப்படி அணுக ஆரம்பித்தால் அது அபாயத்தில்தான் போய் முடியும். இதுபற்றி, திருமாவளவனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்.

வழக்கம் போல் இல்லாமல் சிலை உடைந்த சில மணி நேரத்திற்குள் வேறு சிலையை வைத்து இதனால் பெரும் சாதி காலவரத்தை நடக்காமல் தடுத்துள்ளது தமிழக அரசு. மக்கள் நலனுக்கு அரசியல் செய்வதாக இருந்தால் இது போன்ற சம்பவங்களில் அமைதி காத்து சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். அதை விட்டு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசியல் செய்ய கூடாது என்பதை உணர்த்துவது போல போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களின் மீது தமிழக காவல் துறை வழக்கு தொடர்ந்துள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K