ராணுவ டாங்கி மீது மோதிய கார் 4 பேர் பலி

0
60

வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலை எதிர்கொள்ள தென் கொரியாவுக்கு அமெரிக்கா பக்கபலமாக இருந்து வருகிறது. அதன்படி வடகொரியாவின் தாக்குதலை சமாளிப்பதற்காக அமெரிக்க வீரர்கள் சுமார் 28 ஆயிரம் பேர் தென்கொரியாவில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே வடகொரியாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் ராணுவ படைகள் கொரிய எல்லையில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் தென்கொரியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள கியோங்கி மாகாணம் போச்சியான் நகரில் அமெரிக்க படைகள் போர்ப் பயிற்சி முடித்துவிட்டு ராணுவ முகாமுக்கு திரும்பி கொண்டிருந்தன.

ரோட்ரிக்ஸ் லைவ் என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது அமெரிக்க ராணுவத்தின் சிறிய ராணுவ டாங்கி மீது கார் ஒன்று பயங்கரமாக மோதியது.
இதில் அந்த கார் அப்பளம் போல் நொறுங்கி முற்றிலுமாக உருக்குலைந்து போனது. இதில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ராணுவ டாங்கியில் இருந்த அமெரிக்க வீரர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கான காரணம் குறித்து தென்கொரியா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K