வேலை செய்யாத காலிங் பெல்!போன் எடுக்காத மனைவி! வீட்டின் உள்ளே செல்ல  நினைத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்! 

0
223

வேலை செய்யாத காலிங் பெல்!போன் எடுக்காத மனைவி! வீட்டின் உள்ளே செல்ல  நினைத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்! 

மனைவி போனை எடுக்காததால் வீட்டில் உள்ளே செல்ல நினைத்த கணவர் பைப் மீது ஏறி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தாயப்பார் பகுதியைச் சார்ந்தவர் தென்னரசு வயது 30.  திருமணம் ஆகி இவருக்கு புனிதா மனைவியும் ஒரு குழந்தையும் உள்ள நிலையில் இவர் மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்து வருகிறார்.  இவர் நேற்று நள்ளிரவு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். காலிங் பெல் வேலை செய்யாததால் மனைவிக்கு பலமுறை போன் செய்துள்ளார். உறக்கத்தில் இருந்த புனிதா அவரது போனை எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் விபரீதமாக யோசித்த தென்னரசு மூன்றாவது மாடிக்கு வீட்டின் பின்புறம் உள்ள பைப் லைன் வழியாக ஏறி மாடிக்கு சென்றுள்ளார். அப்போது கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்த தென்னரசு தலையில் பின்புறம் பலத்த அடிபடவே இரத்த வெள்ளத்தில் மயக்கம் அடைந்துள்ளார்.

இதையடுத்து வெகு நேரம் ஆகியும் கணவன் வீட்டிற்கு வராததினால் புனிதா தனது அண்ணனுக்கு போன் செய்து கூறியுள்ளார். உடனே வீட்டிற்கு வந்த புனிதாவின் அண்ணன் தென்னரசுவின் செல்போனிற்கு அழைக்கவே வீட்டின் பின்புறம் இருந்து சத்தம் வந்துள்ளது. உடனே அங்கு சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கிடந்த தென்னரசுவை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் உடனடியாக அவரை மீட்டு நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தென்னரசு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மனைவி போன் எடுக்காததால் அவசரப்பட்டு மாடியேறி தவறி விழுந்து இளைஞர் உயிர் நீத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.