ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டது சரியா? அல்லது தவறா?

0
73

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பல புதிய அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தார்கள். அதோடு பல அனுபவம் வாய்ந்த அமைச்சர்களும் இடம் பெற்றிருந்தனர்.

அதன் குறிப்பிடத்தக்கவர்கள் கே.என். நேரு, துரைமுருகன், உள்ளிட்டோர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பல புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள் அதில் முதன்மையானவர் அரியலூர் மாவட்ட செயலாளராக இருக்கும் எஸ். எஸ் சிவசங்கர் அதேபோல கல்வித் துறை அமைச்சராக இருக்கக் கூடிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றார்கள்.

அந்த வகையில் ராஜகண்ணப்பன் போக்குவரத்துத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் குன்னம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ் எஸ் சிவசங்கர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என்பது பெரிய அளவில் பொது மக்களுடன் தொடர்பில்லாத ஒரு டம்மியான துறையாகவே காணப்படுகிறது உண்மையானதுதான் என்றாலும் கூட அந்த தொகுதியில் வெற்றிபெற்ற யாரும் இதுவரையில் அமைச்சர் பொறுப்புக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இவருக்கு தான் முதன்முதலாக அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அதோடு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருந்தார். அதாவது தற்போது அமைச்சர்களாக பொறுப்பேற்று இருக்கக்கூடியவர்கள் சரியாக செயல்படவில்லை என்றால் நிச்சயமாக அமைச்சரவையில் மாற்றம் உண்டாகும் என்று முன்பே அடிக்கோடிட்டு காட்டியிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அந்த வகையில் புதிதாக அமைச்சராக அதுவும் முதல் முறையாக அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் பலரை முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது.

அந்த வகையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கக் கூடிய ராஜகண்ணப்பன் கடந்த தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையின் போது போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு இனிப்புகள் உள்ளிட்டவற்றை வழங்கியதில் ஊழல் செய்தார் என்று புகார் எழுந்தது.

இந்த நிலையில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பலமுறை தன்னுடைய சாதியின் பெயரை சொல்லி என்னை அவமானப்படுத்தினார் என்று ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் சமூக ஊடகங்கள் மூலமாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார் இந்த விவகாரம் பெரிதாவதற்கு முன்பாகவே தற்சமயம் அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என சொல்லப்படுகிறது.

அதாவது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் தற்சமயம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டிருக்கிறார். அதேநேரம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ் எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் மீதான தொடர் சர்ச்சைகளுக்கும் அவர் மீது எழுந்த தொடர் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்கும் விதமாக அவருடைய இலாகா மாற்றப்பட்டிருக்கிறது என்று பல அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

அதேநேரம் ஒரு அரசு ஊழியரை சாதியின் பெயரை சொல்லி அவரை அவமானப்படுத்திய ஒருவரை அந்த சாதி ரீதியிலான துறைக்கு அமைச்சராக நியமனம் செய்திருப்பது சரியா? அல்லது தவறா? என்ற விவாதமும் தற்சமயம் எழுந்திருக்கிறது.

அமைச்சரவையில் ஏதோ ஒரு பொறுப்பில் இருக்கும் போதே ஒரு நபர் அரசு ஊழியர்களை சாதியின் பெயரை சொல்லி அவமானப்படுத்தி வருகிறார் என்றால் இவர் அந்த சாதிரீதியான துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டால் பிற்காலத்தில் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோரின் நிலை என்னவாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ராஜகண்ணப்பன் மீது குற்றச்சாட்டு எழுந்தவுடன் முதலமைச்சர் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு விட்டார், அவருடைய அதிரடி அரசியலுக்கு இதுவே எடுத்துக்காட்டு என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

கருணாநிதி பாணியில் அல்லாமல் அவர் அரசியலில் சற்று அதிரடி காட்டி வருவது உண்மைதான் என்றாலும் கூட அவருடைய இந்த செயல் அனைவரையும் சற்று யோசிக்க வைத்திருக்கிறது.

சாதாரண ஏதோ ஒரு துறையில் அமைச்சராக இருந்த சமயத்திலேயே அரசு ஊழியரை சாதிப்பெயரை சொல்லி அவமானப்படுத்திய ஒருவரை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமனம் செய்தால் அவரால் அந்த துறைக்கு என்ன நன்மைகள் ஏற்படும்? என்பதை விட பிற்காலத்தில் சாதி ரீதியிலான கலவரங்கள் ஏற்படுவதற்கு இவரே ஒரு மிகப்பெரிய காரணம் என அமைந்து விடுவாரோ என்ற அச்சமும் எழத்தான் செய்கிறது. ஆகவே முதலமைச்சரின் இந்த முடிவு தமிழக அரசியலில் அதிரடியாக பார்க்கப்பட்டாலும் அவருடைய இந்த முடிவு சரியா அல்லது தவறா என்று பொதுமக்களாகிய நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.