பேருந்துகள் இயங்கும், ஆனா இயங்காது – குழப்பத்தில் மக்கள்

0
90

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது தொடர்பாக நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் கொரோனா பாதிப்பு இருப்பதால் இங்கு ஊரடங்கை தொடர்ந்து அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து வரும் ஜூன் 5ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக இன்று முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், பிற சேவைகள், ஷாப்பிங் மால்கள் ஆகியவை வரும் ஜூன் 8ஆம் தேதி முதல் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு தமிழ்நாடு தயாராக இல்லை என்றே தெரிகிறது.

சென்னையை பொறுத்தவரை ஜூன் 30 வரை கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் சென்னை உள்ளிட்ட 4 வடக்கு மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு வாய்ப்பில்லை எனவும் அரசு தெரிவித்துள்ளது.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 50 சதவீத எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படும். அதில் 50 சதவீத பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படுவர். ஆனால் மாவட்டங்களுக்கு இடையில் இயக்கப்படும் பேருந்துகள் பற்றி எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்தை பொறுத்தவரை பயணிகள், பேருந்து ஊழியர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு பின்பற்றவுள்ளது எனவும், தற்போது அரசு ஊழியர்களின் பயன்பாட்டிற்காக சில பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக நடப்பு பிறகு மாதத்தின் தொடக்கத்தில் அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும், மாநில போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. அதாவது ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டால் பேருந்துகளை இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு பேருந்து பயணம் முடிந்த பிறகும் கிருமி நாசினி தெளிக்கப்படும். பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். உரிய இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு நாள் பணியின் போதும் ஊழியர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

கடந்த வியாழன் முதல் அனைத்து பணிமனைகளிலும் 50 சதவீத ஊழியர்கள் வேலைக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது என தமிழக போக்குவரத்து சார்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K