பேருந்துகள் இயங்கவில்லை! நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தின் எதிரொலி!!

0
79

பேருந்துகள் இயங்கவில்லை! நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தின் எதிரொலி!!

மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் இன்று தொடங்கும் என்று தொழிற்சங்கங்கள் ஏற்கனவே அறிவித்திருந்தன. அதன்படி இன்று காலை 6 மணிக்கு இந்த வேலை நிறுத்த போராட்டமானது தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்றும், நாளையும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.

பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வங்கிகள், நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தொழிலார்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த வேலை நிறுத்த போராட்டமானது வருகிற 30-ந் தேதி காலை வரை நடைபெற உள்ளது. இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்குவதை கைவிடுதல், பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டமானது நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் நடைபெறும் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள திமுக அதே சமயம் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. திமுகவின் இந்த இரட்டை நிலைப்பாடு போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் திட்டமிட்டபடி இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டமானது இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அரசு பேருந்துகள் இயங்கவில்லை. குறைந்த அளவிலான தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் அனைவரும் அவதியடைந்து வருகின்றனர்.

author avatar
Parthipan K