பற்றி எரிந்த குடிசைகளால் வெடித்த சிலிண்டர்கள்! அடுத்தடுத்து தீ பரவிய பயங்கரம்! 

0
169
#image_title

பற்றி எரிந்த குடிசைகளால் வெடித்த சிலிண்டர்கள்! அடுத்தடுத்து தீ பரவிய பயங்கரம்! 

மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 21 குடிசைகள் எரிந்து சாம்பல் ஆயின.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் அடுத்த  திருமுடிவாக்கம் பகுதியில் ராஜாராம் என்பவரது வீட்டில்  திடீரென மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த மின்கசிவு காரணமாக அவரது வீட்டில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்த போது எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியதால் தீயானது அருகில் இருந்த குடிசைகளில் பரவியது. இதனால் அந்த பகுதியில் இருந்த 21 குடிசைகளில் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது.

சம்பவம் குறித்து தகவலறிந்ததும் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் இரண்டு சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. தீயினால் 21 குடிசை வீடுகள் தீயில் எரிந்து  அதில் உள்ள பொருட்கள் நாசமாகியுள்ளன.

இந்த தீ விபத்து குறித்து அறிந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டனர். மேலும் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். இதையடுத்து வருவாய் துறையினர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை நிவாரண முகாமில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.