விருதுநகரில் திருமணமான மறுநாளே மணப்பெண் தற்கொலை!

0
88

விருதுநகர் அருகே திருமணமான மறுநாளே மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, அழகாபுரி நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் செல்வக்குமார் (வயது 27) தச்சு வேலை செய்து வருகிறார். விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சுவேதா (வயது 20).

செல்வகுமாருக்கும் சுவேதாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நவாத்தாவில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பின் புதிதாக கட்டிய வீட்டில் புதுமண தம்பதிகள் குடியேறினர். இந்நிலையில் சுவேதா அவரது கணவரிடம் அருகில் உள்ள பழைய வீட்டில் தனது செல்போன் உள்ளது, அதனை எடுத்து வரும்படி கூறினார். இதையடுத்து, செல்போனை எடுத்து வருவதற்காக செல்வக்குமார் சென்றுள்ளார். அப்போது சுவேதா புதுவீட்டின் கதவை அடைத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செல்வக்குமார் கதவை திறக்கும்படி சத்தம்போட்டுள்ளார். ஆனால் சுவேதா கதவை திறக்கவில்லை.

செல்வகுமாரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் உதவியுடன் செல்வக்குமார் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் சுவேதா ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் சுவேதாவை பரிசோதனை செய்து பார்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மானாமதுரை காவல்துறையினர் சுவேதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆர்.டி.ஓ.,விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமணமான மறுநாளே புதுப்பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அவரது செல்போன் ஆய்வு செய்யப்பட்டு இரு வீட்டாரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

author avatar
Parthipan K