போரை தவிருங்கள்! இல்லை என்றால்… ரஷ்யாவை எச்சரிக்கும் அமெரிக்கா!

0
83

உக்ரைனை எல்லையில் முற்றுகையிட்டுள்ள ரஷ்யா போரை தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

உக்ரைன் விவகாரம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு காலத்தில் ரஷ்யாவின் அங்கமாக இருந்து பிரிந்த உக்ரனை நேட்டோ குழுவுடன் இணைக்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், போராடுகின்றன. ஆனால், அதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, உக்ரைனில் தனக்கு ஆதரவான பகுதிகளில் ராணுவத்தை குவித்து வைத்துள்ளது.

ஒன்றரை லட்சம் வீரர்கள் எல்லையில் முகாமிட்டு, நவீன ஆயுதங்களுடன் போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில், அமெரிக்காவும், நேட்டோ குழுவும் கிழக்கு ஐரோப்பாவுக்கு போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளன. இதனால், உக்ரைனில் உச்சகட்ட போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையை தீர்க்கலாம் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகனில் உள்ள ராணுவ அதிகாரி மார்க் மில்லே கூறுகையில், ரஷ்யாவின் நடவடிக்கையால் உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை நடத்த கால அவகாசம் இருப்பதாக தெரிவித்த அவர், அதனைப் பயன்படுத்தி சுமூகமாக பேசித் தீர்க்க ரஷ்யா ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இல்லை என்றால் போர் ஏற்படும் சூழல் ஏற்படும் என்றும், போரை தவிர்க்காவிட்டால், உக்ரைனில் உள்ள அப்பாவி மக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்தை காட்டவதற்காக நடத்தப்படும் இந்த போர் விளையாட்டில், அப்பாவி மக்களின் உயிர் பணயம் வைக்கப்பட்டுள்ளதையே அமெரிக்க அதிகாரி சுட்டிக் காட்டியுள்ளார். இருந்தாலும் இதற்கு அமெரிக்காவும் ஒரு முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது என, இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவணித்து வருவோர் கூறுகின்றனர்.