டிடிவி தினகரன் உடன் கூட்டணி அமைக்கிறதா பாஜக? அண்ணாமலை சொன்ன அதிரடி பதில்!

0
108

தேனாம்பேட்டையில் தனியார் டீக்கடையினை தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். இதனையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் ,2 வருடங்களுக்கு முன்பு முகப்பேரில் இந்த கடையின் 3வது கிளையை திறந்து வைத்ததாக தெரிவித்த அவர், தற்சமயம் 200 வது கிளை திறந்து வைத்திருப்பதாக தெரிவித்தார். சிறு, குறு தொழில் செய்யக்கூடியவர்கள் முன்னேற வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு இதுபோன்று சிறிய தொழில்களை ஆரம்பித்து இலட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்.

பாஜக நிர்வாகிகள் நீக்கம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை பாஜக என்ற பேருந்தில் தவறு செய்பவர்கள் சரியாக செயல்படாதவர்கள், போன்றோர் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டு, புதிதாக பயணம் செய்ய விரும்புபவர்கள் பேருந்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

கட்சியில் இரு நபர்கள் தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு தொடர்பாக பேசி இருக்கிறார்கள். முதல் கட்ட விசாரணை கமிட்டி நாளை திருப்பூரில் இருதரப்பையும் அழைத்து விசாரிக்கப்பட உள்ளது. தவறு செய்தவர்கள் யாரையும் விட்டு விடப் போவதில்லை. நாணயத்தின் 2 பக்கமும் இருக்கிறது. நாளை இது தொடர்பாக இரு தரப்புக்கும் விசாரணை நடைபெறும் தவறு செய்தவர்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனிப்பட்ட பேச்சுவார்த்தை என்று சொல்ல முடியாது. கட்சியின் வளர்ச்சி நடவடிக்கைகளுக்காக லட்சுமண ரேகையை தாண்டக்கூடிய எல்லோரும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று எனக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது தேவைப்பட்டால் பாஜக என்ற பேருந்தில் மாநில தலைவராக இருக்கக்கூடிய நான் கூட இறக்கி விடப்படலாம். அது கட்சியின் வளர்ச்சிக்காக ஒரு தூண்டு கோலாக இருக்கும் என்று தெரிவித்தார்.. கட்சியின் வளர்ச்சிக்கு தடைகளாக இருப்பவர்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவர்கள் கட்சியில் எத்தனை வருட காலம் இருந்தார்கள் என்பதை எல்லாம் கருத்தில் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

பாஜகவுடன் டிடிவி தினகரன் கூட்டணி அமைக்க இசைவு தெரிவித்திருக்கின்ற நிலையில், கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வது குறித்து அதற்கான சில நடைமுறைகளும் செயல்திட்டங்களும் இருக்கின்றன. அதற்கான காலமும் இருப்பதால் தற்பொழுது அது தொடர்பாக எதுவும் தெரிவிக்க இயலாது என்று மறுத்துவிட்டார் அண்ணாமலை.

தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரையில் அதிமுக அதில் பெரிய கட்சியாக தமிழகத்தில் திகழ்கிறது. அதோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து அதற்கான ஒரு சிஸ்டம், செயல்முறை, வியூகங்கள் வகுக்கப்பட வேண்டிய நிலை இருக்கிறது. ஆகவே தற்போது கூட்டணிக்கான பேச்சுவார்த்தை பேசுவதற்கு போதிய கால அவகாசம் இருப்பதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.