விக்ரம் படத்தில் ஹிட் பாடல்களை எழுதிய லோகேஷின் இணை இயக்குனர்… பாராட்டித் தள்ளிய அனிருத்

0
88

விக்ரம் படத்தில் ஹிட் பாடல்களை எழுதிய லோகேஷின் இணை இயக்குனர்… பாராட்டித் தள்ளிய அனிருத்

விக்ரம் திரைப்படம் வெளியாகி யாருமே எதிர்பாராத இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது.

கமல்ஹாசன் அரசியலுக்கு சென்ற பின்னர் சினிமாவில் சரியாக கவனம் செலுத்தவில்லை. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் 2 திரைப்படமும் படுதோல்வியாக அமைந்தது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் படம் எதுவும் வெளியாகாத நிலையில் ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.  கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்த விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார்.

வெளியானது முதல் இப்போது வரை வெற்றிகரமாக ஓடிவரும் விக்ரம் திரைப்படம் இதுவரை 450 கோடி ரூபாய்க்கும் மேல் வெற்றிகரமாக திரையரங்குகள் மூலம் வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 170 கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் எந்தவொரு படமும் படைக்காத வசூல் சாதனை இது.

இந்நிலையில் ரிலீஸுக்கு பின்னர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் தயாரிப்பாளராக மட்டும் சுமார் 120 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் வெளியான தமிழ் படங்களில் தயாரிப்பாளருக்கு இந்த அளவுக்கு லாபம் கொடுத்த தமிழ்ப் படம் எதுவும் இல்லை என கோலிவுட் வட்டாரமே ஆச்சர்யத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது அனிருத்தின் பாடல்களும் இசையும். இந்நிலையில் படத்தில் ‘நாயகன் மீண்டும் வர்றான்’ மற்றும் போர்க்கண்ட சிங்கம் ஆகிய பாடல்களை எழுதிய லோகேஷ் கனகராஜின் இணை இயக்குனர் விஷ்ணு எடாவனைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார் அனிருத். அவரது பதிவில் “ விரைவில் இவரை வெற்றிகரமான இயக்குனராக காணுவோம். அற்புதமான பாடல் வரிகள் பற்றிய அறிவைக் கொண்டவர்” என பாராட்டியுள்ளார். இந்த ட்வீட் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.